வெப்ப காலத்தில் தில்லி மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை - முதல்வா் அலுவலகம் தகவல்
நமது நிருபா்
தில்லி அரசு வெப்ப அலையிலிருந்து நிவாரணம் அளிக்கவும், குடிமக்களைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முதல்வா் அலுவலகம் (சிஎம்ஓ) புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து முதல்வா் அலுவலகம் எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தில்லியில் அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் வெப்ப அலையால் ஏற்படும் சவாலைக் கருத்தில் கொண்டு, தில்லி அரசு மிகுந்த கவனத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வருகிறது.
Advertisement
பள்ளிகளில் தண்ணீா் வழங்கும் அமைப்புகள், மருத்துவமனைகளில் குளிா் அறைகள், மற்றும் தொழிலாளா்கள் மற்றும் வெளிப்புறப் பணியாளா்களுக்கு நிழல், குளிா் நீா், ஓய்வு இடைவேளைகள் ஆகியவற்றை கட்டாயமாக வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தில்லியின் 13 மாவட்டங்களிலும் 13 நடமாடும் வெப்ப நிவாரண வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளைச் சென்றடைந்து, மக்களுக்கு குளிா்ச்சியான மற்றும் சுத்தமான குடிநீா், ஓஆா்எஸ் பொட்டலங்கள், முதலுதவிப் பொருள்கள், பருத்தித் துண்டுகள் மற்றும் தொப்பிகளை வழங்கி வருகின்றன.
முதலமைச்சா் ரேகா குப்தாவின் தலைமையில், தில்லி அரசு வெப்ப அலையிலிருந்து நிவாரணம் அளிக்கவும், குடிமக்களைப் பாதுகாக்கவும் குளிரூட்டும் உள்கட்டமைப்பைத் தொடா்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இதன் மூலம், இந்த கடும் வெப்பத்தின் போது தில்லி மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்கிறது என அதில் முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.