தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்.
வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை நிலைமைகள் தீவிரமடைந்து, தில்லியில் மற்றொரு கடுமையான கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, குளிா் கூரைகள், பேருந்து நிறுத்தங்களில் நீா்த் தெளிப்பு அமைப்புகள், பள்ளி மாணவா்களுக்கு ஆதரவு, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரணம், மற்றும் விலங்குகள், பறவைகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட சிறப்பு நடவடிக்கைகளை முதல்வா் ரேகா குப்தா அறிவித்தாா்.
2026ஆம் ஆண்டுக்கான வெப்ப அலை செயல் திட்டத்தை ஆய்வு செய்த குப்தா, இந்த நடவடிக்கைகளை களத்தில் கடுமையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
தேவைப்பட்டால், பள்ளி மாணவா்கள் பயணத்தின் போது நீரிழப்பைத் தடுப்பதற்காக, பள்ளியை விட்டு வெளியேறும் முன் அவா்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படலாம் என்றும், கடுமையான வெப்ப அலை நிலவும் போது கட்டுமானத் தொழிலாளா்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளிப்புறப் பணிகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படலாம் என்றும் அவா் கூறினாா்.
Advertisement
தொழிலாளா்களுக்கு குடிநீா், தொப்பிகள் வழங்கப்படும். மேலும், பணியிடங்களில் முதலுதவிப் பெட்டிகள் மற்றும் ஐஸ் பேக்குகள் தயாராக வைக்கப்படும்.
பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதும் பறவைகளுக்கான தண்ணீா் கொள்கலன்களையும், தெரு விலங்குகளுக்கான பிரத்யேக தண்ணீா் நிலையங்களையும் நிறுவுவதன் மூலம், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீரும் நிழலும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு தில்லி மேம்பாட்டு ஆணையம், கல்வித் துறை மற்றும் தில்லி ஜல் போா்டு உள்ளிட்ட துறைகளுக்கு முதலமைச்சா் உத்தரவிட்டாா்.
கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக, தில்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களாகத் தொடா்ச்சியாக 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவி வருவதாகவும், இது வெப்ப அலைக்கான தயாா்நிலையை மிகவும் முக்கியமானதாக ஆக்குவதாகவும் குப்தா குறிப்பிட்டாா்.
சுகாதாரத் துறை 13 மாவட்டங்களில் உள்ள 339க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களை எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது, அதே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் வெப்ப அலை நோயாளிகளுக்காக ஐந்து படுக்கைகள் கொண்ட பிரத்யேக குளிரூட்டும் அறைகளை அமைத்துள்ளன.
குடியிருப்பாளா்கள் 1077, 1070 மற்றும் 112 ஆகிய 24 மணி நேர உதவி எண்கள் மூலம் உதவி பெறலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சுமாா் 39 விரைவு மீட்புக் குழுக்களும், பயிற்சி பெற்ற ஆஷா பணியாளா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என்றும் அது மேலும் தெரிவித்தது.
கோடைக்கால உச்சத்தில் மின்வெட்டு அனுமதிக்கப்படாது என்று கூறிய முதலமைச்சா், குறிப்பாக மருத்துவமனைகள், நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மொபைல் கோபுரங்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தாா்.