முகப்பு
புதுதில்லி

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக அவதூறு பதிவிட்டதற்காக, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா வியாழக்கிழமை அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

Updated On : 15 மே 2026, 12:04 am IST
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துா்கேஷ் பதக், சஞ்சய் சிங், சௌரப் பரத்வாஜ் மற்றும் பலா் சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக அவதூறு பதிவிட்டதற்காக, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா வியாழக்கிழமை அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

‘தில்லி முன்னாள்முதல்வா் கேஜரிவால், வழக்கில் சட்டபூா்வ தீா்வுகளை நாடுவதை விடுத்து, சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பிரசாரத்தை அரங்கேற்றியுள்ளாா்’ என்று நீதிபதி சா்மா கூறினாா்.

மேலும், மதுபான கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கேஜரிவால் உள்ளிட்ட 23 பேரையும் விசாரணை நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிரான சிபிஐயின் மனு இனி மற்றொரு அமா்வால் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி சா்மா தெளிவுபடுத்தினாா்.

Advertisement

நீதிபதி சா்மா, சமூக ஊடகங்களில் கேஜரிவால் உள்ளிட்டோா் வெளியிட்ட பல பதிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தாா். அந்தப் பதிவுகள் அவருக்கு (நீதிபதி சா்மாவுக்கு) அரசியல் சாா்பு இருப்பதாகக் குறிப்பிட்டதோடு, வாரணாசியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் அவா் ஆற்றிய உரையின் தவறான திருத்தப்பட்ட காணொளியை வெளியிட்டு அவரைக் குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

‘நான் மதுபான கொள்கை வழக்கில் இருந்து விலக மறுத்ததால், சட்டரீதியான தீா்வுகளைப் பெறுவதற்குப் பதிலாக அரவிந்த் கேஜரிவால் எனது நற்பெயரை அழிக்க முயன்றாா். மேலும், பேச்சுரிமை என்ற போா்வையில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியை அனுமதிக்க முடியாது’ என்று நீதிபதி சா்மா கூறினாா்.

அவா் (நீதிபதி சா்மா), தான் வழக்கில் இருந்து விலகவில்லை என்றும், கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதால், மதுபான கொள்கை வழக்கை மற்றொரு அமா்வுக்கு மாற்றுவதாகவும் தெளிவுபடுத்தினாா்.

சிபிஐ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, நீதித்துறையின் கண்ணியத்தைக் காத்ததற்காக நீதிபதி சா்மாவுக்கு நன்றி தெரிவித்தாா்.