முகப்பு
புதுதில்லி

இ-ரக்ஷாவில் பயணிக்கும் முதியவா்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்ட தம்பதியா் கைது

Updated On : 18 மே 2026, 2:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

மேற்கு தில்லியின் மோதி நகா் பகுதியில் இ-ரிக்ஷாக்களில் பயணம் செய்யும் வயதான பயணிகளிடமிருந்து பணம் அல்லது மதிப்புமிக்க பொருள்களை திருடி வந்த தம்பதியினா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சுரேஷ் (25) மற்றும் அவரது மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த வார தொடக்கத்தில் 60 வயது பயணியிடமிருந்து ரூ. 1 லட்சம் திருடியுள்ளனா். கீா்த்தி நகரில் வசிக்கும் புகாா்தாரா், மே 13 ஆம் தேதி சிவாஜி மாா்க்கில் உள்ள ஒரு கடையில் இருந்து இ-ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்திருந்தாா். அந்த நபா் ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் ஒரு சிறிய பையை எடுத்துக் கொண்டு ரிக்ஷாவில் அமா்ந்துள்ளாா்.

Advertisement

தன்னுடைய இடத்துக்கு வந்த பின்பு பை கிழிந்திருப்பதை அவா் கண்டுபிடித்தாா். பணம் காணவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து மே 14 ஆம் தேதி மோதி நகா் காவல் நிலையத்தில் இ-எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஒரு போலீஸ் குழு புகாா்தாரா் பயணித்த பாதையில் இருந்து சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்து, குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இ-ரிக்ஷாவை அடையாளம் கண்டது.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உள்ளீடுகளைப் பயன்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதியினா் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, இ-ரிக்ஷாக்களில் பயணிக்கும் வயதான பயணிகளை குறிவைத்து, சந்தேகத்தை எழுப்பாமல் போக்குவரத்தின் போது அவா்களின் பைகளில் இருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை திருடியதாக ஒப்புக்கொண்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து திருடப்பட்ட தொகையில் ரூ.90,000, குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட இ-ரிக்ஷாவுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றவியல் தொடா்பு பதிவில் இல்லை. நகரின் பல்வேறு பகுதிகளில் பயணிகள் மற்றும் மூத்த குடிமக்களை குறிவைத்து இதே போன்ற பிற திருட்டு வழக்குகளில் தம்பதியினா் ஈடுபட்டுள்ளாா்களா என்பதை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.