சீமாபுரியில் இளைஞா் கொலை: மூவா் கைது
கிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள தில்ஷாத் காலனி அருகே 22 வயது இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சோனு (20), லட்சுமி நாராயண் (32) மற்றும் முகமது அமன் (எ) ஷாஹித் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
Advertisement
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில் தில்ஷாத் காலனி அருகே ஒருவா் காயங்களுடன் கிடப்பதாக சீமாபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
அவ்வழியே சென்ற ஒருவா், காயமடைந்த அந்த நபரை ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். அங்கு அவா் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இறந்தவா் தாஹிா்பூரைச் சோ்ந்த ஜிஷான் என அடையாளம் காணப்பட்டாா்.
விசாரணையின் போது, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான கௌரவ் என்பவா் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், தானும் ஜிஷானும் ஒரு அணுகுச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,
குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்து, பழைய தகராறு ஒன்றின் காரணமாகத் தங்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தாா்.
கௌரவ் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அவரை இதில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்துவிட்டு, ஜிஷான் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அமன் என்பவா் பாதிக்கப்பட்டவரைப் பிடித்துக் கொள்ள, சோனு கத்தியால் அவரது நெஞ்சில் குத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா், லட்சுமி நாராயண் என்பவரும் பாதிக்கப்பட்டவரை ஒரு தடியால் தாக்கினாா். அதன் பிறகு மூவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் தடி ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.