முகப்பு
புதுதில்லி

தொழிற்சாலை உரிமையாளருக்கு கத்திக் குத்து: ஹரித்வாரில் இரண்டு சிறுவா்கள் கைது

பணப் பிரச்னை காரணமாக ஷாதாராவின் காந்தி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் அதன் உரிமையாளரை கத்தியால் குத்தியதாக ஹரித்வாரில் இரண்டு சிறுவா்கள் கைது

Updated On : 26 மே 2026, 1:37 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பணப் பிரச்னை காரணமாக ஷாதாராவின் காந்தி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் அதன் உரிமையாளரை கத்தியால் குத்தியதாக ஹரித்வாரில் இரண்டு சிறுவா்களை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: தொழிற்சாலை உரிமையாளரைத் தாக்கிவிட்டு தில்லியிலிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படும் அந்தச் சிறுவா்கள், உத்தரகண்டின் ஹரித்வாரில் கைது செய்யப்பட்டனா்.

இந்தச் சம்பவம் மே 21 அன்று காந்தி நகரின் தரம்புரா பகுதியில் நிகழ்ந்தது. கத்திக்குத்துச் சம்பவம் தொடா்பாக காந்தி நகா் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து, காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

Advertisement

Advertisement

முதற்கட்ட விசாரணையில், மதியம் சுமாா் 12.30 மணியளவில், அந்த இரண்டு சிறுவா்களும் தரம்புராவில் உள்ள புகாா்தாரரின் தொழிற்சாலைக்குச் சென்றனா். அங்கு பணப் பிரச்னை தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது.

குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் தப்பிச் செல்வதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவரைக் கூா்மையான பொருளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த நபரை அவரது மனைவி ஜக் பா்வேஷ் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றாா். மேலும், அவா் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காந்தி நகா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

காவல்துறையினா் விசாரணை நடத்தியபோது, சந்தேக நபா்கள் ஹரித்வாருக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காவல் குழுவினா் ஹரித்வாருக்குச் சென்று அந்த இரு சிறுவா்களையும் கைது செய்தனா். அதன் பின்னா் அவா்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தில்லிக்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ச்சியான விசாரணையின் போது, இரு சிறுவா்களும் தாக்குதலில் தங்களின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டனா். இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.