மக்களுக்காகவே மன்னர்கள்
மக்களுக்காகவே மன்னர்கள் ('பழந்தமிழர் வாழ்வியல் காட்டும் புறநானூற்றுப் பாடல்கள்' நாடக வடிவில்), புலவர் வெய்கைமுத்து; பக்.192; ரூ.225; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை; 044- 26251968.
புறநானூறில் பல பாடல்களை எளிதில் புரிந்துகொள்ள இயலாது. ஆனால் அவற்றின் உட்புகுந்து பொருள் உணரும்போது பெரிய புதையலைக் கண்ட மகிழ்வு பொங்குகிறது.
இலக்கியப் பேழையில் பொருள் புரிந்து கொள்ள முடியாமல் பதுங்கிக் கிடக்கும் புறநானூற்றுப் பாடல்களை நாவில் நடமாடச் செய்யும் வகையில் நாடக உத்தியைக் கையாண்டிருக்கிறார் நூலாசிரியர். பத்து பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கான கதாபாத்திரங்களை உரைநடை வடிவில் விளக்கிச் சொல்லும் அரியதோர் முயற்சி இது.
சேர நாட்டில் உள்ள அனந்தையூரின் கண் உள்ள பெருந்தேவனாரின் குருகுலத்தில் இருந்து தொடங்குகிறது நாடகம். பெருந்தேவனாருடன் குருகுல மாணவர்கள் மாலன், சீலன், மதன், மாதவன், மங்கலப் பேரியான் ஆகிய 5 மாணவர்களும் இடம்பெறுகின்றனர். அப்போது பெருந்தேவனார், இந்தக் குருகுலத்தில் நீங்கள் ஐவரும் சேர்ந்து ஒரு திங்கள் நிறைவடைந்து விட்டது. இதுவரை நீங்கள் கற்றதையும், கற்றதனால் பெற்றதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். வினாக்கள் தொடுக்காமல் விடைகளை மட்டும் தருவது சிறந்த பயிற்று முறை ஆகாது. ஆசான் உரைத்தது அத்தனையும் அமைவுறத் தெரிந்தாலும் கால் கூறுதான் நெஞ்சிற் பதியும். அதை நான் தெரிந்து கொள்ளலாமா? தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதானே? இது சரியா? மாலன்! நீ சொல் என்கிறார்.
அதற்கு மாலன், ஐயா! இந்தப் பழமொழி சரியல்ல; இங்கு குறிப்பிடப்படும் வாய் வேறு... வயிறு வேறு... என்று கூறி அதற்கான விளக்கத்தை பெருந்தேவனாரிடம் கூறி அவரை வியப்பில் ஆழ்த்துகிறார் சீடன் மாலன். அந்த விளக்கத்தைத் தெரிந்து கொள்ள 'மக்களுக்காகவே மன்னர்கள்' என்ற புறநானூற்றுப் புதையலின் பக்கங்களைத் தேடுவது அவசியம்.