அள்ளித் தந்த பூமி
அள்ளித் தந்த பூமி - டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்; பக். 144; ரூ.150; நன்னூல் அகம், சென்னை-128; 97910 71218.
தொழிலதிபரான நூலாசிரியரின் மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. 'இந்தப் பூமி நமக்குத் தந்துள்ள செல்வங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் நேரமும் அடங்காது. கைக்கு எட்டும் தூரத்தில் நமக்கு வேண்டியவற்றை அள்ளித் தரும் பூமி. அவற்றை எல்லாம் நினைவுகூரவே இந்த நூல்' என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
அண்மைக்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் இளைஞர்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயம் மூத்தோரின் மனதில் உள்ளது. இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டியது. பெற்றோரா? ஆசிரியரா? ஊடகங்களா? சமூகத் தொடர்பு சாதனங்களா? என்ற விவாதம் இருக்கிறது. எதிர்காலத்தில் நல்லதொரு சந்ததியை உருவாக்கும் பொறுப்பைத்தட்டிக் கழிக்கக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் நூலில் 51 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் ஒவ்வொன்றும் சில பக்கங்கள்தான் என்றாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதியை எடுத்துரைக்கிறது.
குறிப்பாக, கலவர பூமியான காஷ்மீரில் தனது தோழி குடும்பத்துக்காக உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் இஸ்லாமியப் பெண்ணின் மனித நேயம் நல்லதொரு நீதியை வலியுறுத்துகிறது. தொழில், சமூகம், தலைமைப் பண்பு, சாதனையாளர்கள், பிரச்னைகளுக்கான தீர்வு, வெற்றியின் ரகசியம், நேர்மறையான அணுகுமுறை, மருத்துவம் ... என்று இந்த நூல் பல்சுவைப் பெட்டகமாக இருக்கிறது.
வாழ்க்கையிலும், தொழிலிலும், பணியிலும் சோர்ந்து கிடப்பவர்கள் இந்த நூலைப் படித்தால் புத்துணர்ச்சி ஏற்படும். படிக்க மட்டுமல்லாது பாதுகாக்கவும் வேண்டிய நூல் இது; பரிசளிக்கவும் சிறந்தது.