பாரதி பாமாலை
பாரதி பாமாலை - முனைவர் நயம்பு. அறிவுடை நம்பி; பக். 172; ரூ.150; வனிதா பதிப்பகம், 11 நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 17.
பாரதியார் குறித்து பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அப்துல் ரகுமான், கண்ணதாசன், சுரதா, வாலி, வைரமுத்து உள்ளிட்ட 69 தமிழ் ஆளுமைகள் எழுதிய பாமாலைகளின் தொகுப்பு இது.
காந்தியடிகள், கருணாநிதி, வலம்புரி ஜான், ஜீவானந்தம் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
'திருவல்லிக்கேணி யானை தின்றுவிட்ட தமிழ்க் கரும்பு' என்று மகாகவி குறித்து கவிஞர் வாலி பதிவு செய்துள்ளது கவிதைக்கு அழகு சேர்க்கிறதே தவிர உண்மை அதுவல்ல.
திருவல்லிக்கேணி யானை சம்பவம் 1921 ஜூன் மாதம் நிகழ்ந்தது. விரைவில் அதிலிருந்து மீண்ட பாரதியார் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 'சுதேசமித்திரன்' அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்று வந்தார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஆகவே, யானை இடறியதால் பாரதியார் மரணமடையவில்லை என்பது தெளிவாகிறது.
'உன் எழுத்து இந்தப் பிரபஞ்சத்தின் பிழிவு' என்ற கவிஞர் வைரமுத்துவின் கூற்றுக்கு இந்நூல் வலு சேர்க்கிறது.
'பாரதியை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைக் கவனித்துக் கொள்ள தமிழ்நாட்டில் யாரும் இல்லையா?' என்று மகாத்மா காந்தி; 'பாரதியார் தமிழ்நாட்டில் திரு அவதாரம் செய்தது தமிழர்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும்' என்று ராஜாஜி; 'தமிழ் மொழியில் ஒரு புதிய பரம்பரையையே பாரதி தோற்றுவித்து நிறுவிவிட்டான் என ஜீவா உள்ளிட்டோர் போற்றியுள்ளதையும் பதிவு செய்துள்ளது.
பல்வேறு அறிஞர்கள், ஆளுமைகள் பதிவு செய்துள்ள கருத்துகளை இந்த ஒரே நூல் மூலம் அறிந்துகொள்ள முடிவது நூலாசிரியரின் ஆய்வுத் திறனுக்கும் அயராத உழைப்புக்கும் சான்று பகர்கிறது. இந்நூல் எட்டயபுரத்தில் வெளியிடப்பட்டது மகாகவிக்கு பாமாலை சூட்டியது போல அமைந்துள்ளது. தமிழ் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல்.