சங்க இலக்கிய ஆய்வும் அட்டவணைகளும்
சங்க இலக்கிய ஆய்வும் அட்டவணைகளும் (ந.சஞ்சீவி கட்டுரைகள்) தொகுப்பாசிரியர் - சண்முகசுந்தரம்; பக். 685; ரூ.650, காவ்யா, சென்னை-24; 044-23726882.
1973-இல் சென்னை பல்கலை. தமிழ்த்துறை சார்பில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு நூலானது இரண்டாவது பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கிய அட்டவணை, புலவர் வகை, பெண்பாற் புலவர்கள் என 4 பிரிவுகளில் 68 பிரதான தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
கபிலர், கணியன் பூங்குன்றனார் உள்ளிட்ட புலவர்களின் நூல்கள், அவர்களை ஆதரித்த வள்ளல்கள், அன்றைய தமிழ் சமூக சூழல்கள், பாட்டு, அகமா, புறமா எனும் விவரங்களையும் அட்டவணைப்படுத்தியிருப்பது படிக்க எளிதாகிறது. சங்கத் தமிழ் இலக்கிய உலகில் 30 பெண்பாற்புலவர்களும் இருந்துள்ளதாகக் குறிப்பிடும் நூலாசிரியர். அவர்களில் அவ்வையார் பாணர் குலத்தவர் என்பது போன்ற அரிய தகவல்களையும் தந்துள்ளார்.
நற்றிணை, குறுந்தொகையில் அன்றைய தமிழர்களின் வாழ்வும் வளமும், வீரமும் காதலும் போன்ற தகவல்கள் நயம்பட தெரிவிக்கப்பட்டுள்ளன. ஊர்களால், கோத்திரத்தால், சமயத்தால், தெய்வத்தால், தொழில்களால் என பெயர்க் காரணங்களை ஆதாரபூர்வமாக ஆய்ந்து வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
மொத்தத்தில் நூலானது பாமரரையும் படிக்கத்தூண்டும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. படிப்போர் சலித்து விடாதபடி கட்டுரைகள் நிகழ்காலத்தில் தொடங்கி, சங்க காலத்துக்குள் அழைத்துச் செல்வதாக உள்ளது. எதிர்கால சங்க இலக்கிய ஆய்வுக்கு அடிநாதமாக அமைந்துள்ளது இந்த நூல்.