பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கே. ஜீவபாரதி; பக். 256; ரூ. 260; ஜீவா பதிப்பகம், சென்னை- 17; 9952079787.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலைப் போல சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
பாரதிதாசனிடம் உதவியாளராகச் சிறிது காலம் இருந்ததுடன், ஒவ்வொரு பாடலையுமே 'பாரதிதாசன் வாழ்க' என்றெழுதித் தொடங்கும் பட்டுக்கோட்டையின் திருமணமும் அவர் தலைமையில்தான் நடைபெற்றது.
'தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது' என்ற பாடல் வரிகள் எவ்வாறு பெரும் திறப்பை ஏற்படுத்திக் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ள ஆசிரியர், பாரதிக்குப் பின் ரஷியப் புரட்சி பற்றி எழுதிய கவிஞரின் மிகச் சிறந்த பாடலையும் அப்படியே தந்துள்ளார்.
பட்டுக்கோட்டையின் புகழ்பெற்ற பல பாடல்கள் - சின்னச் சின்ன இழை பின்னிப்பின்னி வரும்... காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி... - எத்தகைய சூழலில் எழுதப்பட்டன என்று பாடல்கள் பிறந்த கதை என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
கல்யாணசுந்தரத்தின் வாழ்வில் உதவிய ஆளுமைகளையெல்லாம் பதிவு செய்துள்ள நூலாசிரியர், எம்ஜிஆரின் அரசியல் வாழ்விலும் வெற்றியிலும் பட்டுக்கோட்டையின் பாடல்களுக்கு எத்தகைய இடமிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
வெறும் 29 வயதிலேயே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முடிவு நேரிட்டுவிடுகிறது. பட்டுக்கோட்டை மறைந்தபோது கண்ணதாசன் எழுதிய இரங்கல் கட்டுரையும், கவிதையும், காலத்தால் அழியாதவை. பாரதி, புதுமைப்பித்தன் என அற்பாயுளில் இழந்த ஆளுமைகளின் வரிசையில் இடம்பெற்றுவிட்டாலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய விரிவான சித்திரத்தை அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.