முத்திரை பதித்த பொறியாளர்கள்
நூல் அரங்கம்முத்திரை பதித்த பொறியாளர்கள்
முத்திரை பதித்த பொறியாளர்கள் - எஸ்.கணேசன், பக். 192; ரூ.150; சண்முகம் பதிப்பகம், மதுரை- 625002; 97863 89946.
தமிழகத்தில் பொதுப்பணித் துறை 1858-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுப் பணித் துறை பொறியாளர்களாக இருந்து சிறப்பாக, நேர்மையாகப் பணியாற்றி வரலாற்றில் இடம் பிடித்த பொறியாளர்கள் குறித்து இந்த நூலில் விவரிக்கிறார் நூலாசிரியர்.
வள்ளுவர் கோட்டம், மகாத்மா காந்தி மண்டபம், அண்ணா சதுக்கம், கண்ணகி சிலை, முக்கிய அணைகள் என பல்வேறு முக்கிய கட்டுமானங்களின் சிறப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
இன்றைய அரசுப் பொறியாளர்களும், பொறியியல் மாணவர்களும் பொறியாளர்கள் எஸ்.விஸ்வேஸ்வரய்யா, மா.வே.மாணிக்கநாயக்கர், சி.மணவாளன், மு.துரைராசன் போன்றவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொறியியல் பேராசிரியர்கள் சாதனை படைத்த பொறியாளர்களின் வரலாறை பொறியியல் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவது அவசியம். வாய்ப்பிருந்தால் இவர்களைப் பற்றி ஒரு பாடம் கூட ஏற்பாடு செய்யலாம் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசின் கட்டுமானங்கள் எந்தளவுக்குத் தரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நூலாசிரியர் மருத்துவர்களுக்கு இணையாக கட்டுமானப் பொறியாளர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டடப் பொறியாளர்கள் படித்து, பாதுகாக்க வேண்டிய நூல்.