காவியத் தலைவர் கலைஞர்
காவியத் தலைவர் கலைஞர்-சி.எஸ்.தேவநாதன்; பக். 400; ரூ.400; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044-42161657.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ஏராளமான நூல்கள் வெளியாகியுள்ளன. தன் வரலாற்றை 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அவரே எழுதியுள்ளார். ஆனால், எளிய மொழிநடையில் சொல்லும் விதத்தில் தனித்துவம் பெறுகிறது இந்த நூல்.
பால பருவம் முதல் மறைவு வரையிலான நிகழ்வுகள் 39 தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. பதினான்கு வயதில் அண்ணாவின் அறிமுகம், மண வாழ்வு, திமுக தொடக்கம், 1957-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் வெற்றி என ஒரு நாவல்போல கட்டுரைகள் தொடர்கின்றன.
1967-ஆம் ஆண்டில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது, சைதை தொகுதியில் வென்ற கருணாநிதி, 'எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 32,000 வாக்குகள் கிடைத்துள்ளன. அவர்கள் என்னிடம் ஏதோ குறைகண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். அவர்களும் மன நிறைவு காணும் வகையில் எனது பணி அமையும்' என்றார். இதுபோன்ற பல தகவல்கள் சுவையைக் கூட்டுகின்றன.
1970-ஆம் ஆண்டு ஜூலையில் அவர் முதல்வராக மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்த 'அக்கரைச் சீமையிலே' கட்டுரை பல அரிய தகவல்களைத் தருகிறது. எம்ஜிஆருடனான கருத்து வேறுபாட்டை விளக்குகிறது "கழகத்தில் பிளவு' கட்டுரை.
திரையுலகச் சாதனைகள், அவசரநிலை பிரகடன நெருக்கடிகள், முதல்வராகப் பணிகள்.. என இக்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் தகவல் களஞ்சியமாக மிளிர்கிறது நூல். கட்டுரைகளுக்கு ஏற்ற பொருத்தமான புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு.