நாட்டுப்புற வேளாண்மை
நாட்டுப்புற வேளாண்மை - இரா.மனோகரன், பக்.272, ரூ.270; காவ்யா பதிப்பகம், சென்னை-14. 98404 80232.
வேளாண்மை குறித்த அரிய தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல் இது. சங்க இலக்கியங்கள், பண்டைய பாரம்பரியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், வளமைச் சடங்குகள் வழியாக வேளாண்மை குறித்த ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. நூலாசிரியர் வேளாண் துறையில் பணிபுரிந்தவர் என்பதால் ஒவ்வொரு தகவலையும் நுணுகி ஆய்ந்து வழங்கியிருக்கிறார்.
வேளாண் தொழிலின் ஆரம்ப நிலை, படிப்படியான வளர்ச்சி நிலைகள் உள்ளிட்டவை நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேளாண் தொழிலை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் பெண்கள் என்ற செய்தி வியப்பைத் தருகிறது.
4,000 ஆண்டுகளுக்கு முன்பே கரும்பு பயிரிட்டு வெல்லம் தயாரித்த செய்தியும், வேளாண் தொழில்புரிந்தோரில் குறிஞ்சி மக்கள் ஏனல் உழவர், முல்லை மக்கள் செஞ்சால் உழவர், மருதநில மக்கள் கழனி உழவர், நெய்தல் நில மக்கள் தண்டலை உழவர் என்றழைக்கப்பட்ட செய்தியும் ஆச்சரியமூட்டுகின்றன. நூலுக்கு சிகரம் வைத்தாற்போல சிறப்பிப்பது வேளாண் குறித்த பாடல்களே.
ஏர்ப்பாட்டு, இறவைப் பாட்டு, நடவுப்பாட்டு, களையெடுப்புப் பாட்டு, வண்டிப் பாட்டு, அறுவடைப் பாட்டு, எசப்பாட்டு, வேடிக்கை பாட்டு, கதைப் பாட்டு, வழிபாட்டுப் பாட்டு என நீளும் பாடல்களை சேகரித்து வழங்கிய நூலாசிரியரின் பணி பிரமிப்பைத் தருகிறது.
இயற்கையோடு இயைந்து வாழ வேண்டிய மனிதர்களுக்கு வேளாண்மை என்பது தொழில் அல்ல தொண்டு; பணி அல்ல பண்பாடு என்பதை ஆய்வு வழி நிறுவுகிறது இந்நூல். வாசித்து பாதுகாக்க வேண்டிய அரிய நூல்.