லேடீஸ் ஸ்பெஷல்
இதழின் வெள்ளி விழா தீபாவளி மலர் வாசகர்களின் அறிவுப் பசிக்கு விருந்து படைக்கும் வகையில் வித்தியாசமான படைப்புகளுடன் வெளியாகியுள்ளது.
இதழின் வெள்ளி விழா தீபாவளி மலர் வாசகர்களின் அறிவுப் பசிக்கு விருந்து படைக்கும் வகையில் வித்தியாசமான படைப்புகளுடன் வெளியாகியுள்ளது. எஸ்.எல்.நாணுவின் "அன்புள்ள அம்மாவுக்கு', பா.ராகவனின் "மகிழ்ச்சி', ஜெ.பாஸ்கரன் எழுதிய "மனிதர்கள் மாறலாம்', தேவிபாலாவின் "என் வழி! தனி வழி'!, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய "சின்னபாட்டி', கிரிஜா ராகவனின் "சிறகுகள்', இந்திரா பார்த்தசாரதியின் "யார் எதிரி? யார் சிநேகிதன்?' உள்பட மனித உறவுகள், சமூகம் சார்ந்து மொத்தம் 24 முத்துமுத்தான சிறுகதைகள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையும் தரம்; ஒட்டுமொத்த வாசகர்களுக்கு கிடைத்த வரம்.
நா.பார்வதியின் "ஒற்றுமை', மதிவதனியின் "கேள்விக்குள் பிறந்தவளா'? மீ.விசுவநாதனின் "எளிய வீட்டு கொலு', அழகிய சிங்கரின் "எறும்பு' என இடையிடையே வரும் கவிதைகள் தீபாவளி இனிப்புகளாக தித்திக்கின்றன. சிறுகதை, கவிதை, கட்டுரை என ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் வாசகர்களுக்கு பண்டிகைக் கால ஊக்கப் பரிசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆன்மிகம், சுற்றுச்சூழல், இலக்கியம், கலாசாரம், பயணம் என பலதரப்பட்ட பிரிவுகளைஒருங்கிணைத்து வாசகர்களுக்கு தீபாவளி கூட்டாஞ்சோறு பரிமாறியிருக்கிறார் மலர் ஆசிரியர் கிரிஜா ராகவன். ஓர் இதழின் வெள்ளி விழா மலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறது. அதேபோன்று இலக்கியவாதிகள் அளித்திருக்கும் படைப்புகள் இதழில் வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.