சிலம்பில் மணியோசை
சிலம்பில் மணியோசை - ப.முத்துமணி; பக்- 160. ரூ.200. வையைப் பதிப்பகம், தேனி; 98423 70792.
ஐம்பெரும் காப்பியங்களில் முதலாவதாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம். கி.பி.முதலாம் நூற்றாண்டு கால மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் முறைகளை இக்காலத்தவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சிலப்பதிகாரத்தில் தோய்ந்து ஆய்வுக் கட்டுரைகளைத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
இசை தொடர்பான கருவிகள், இசைக் கலைஞர்களின் நடன அசைவுகள், அணிகலன்கள் ஆகியவை குறித்துப் பதிவு செய்திருப்பது படிப்போரை ஆச்சரியப்படுத்துகிறது. இத்துடன் கோவலன், மாதவி கூடல் காட்சிகளைச் சொல்லும்போது அவற்றை நம் கண் முன் நிறுத்துகிறார்.
மதுரையைக் காவல் காக்கும் பூதங்களைச் சொல்லுவதுடன் 20-ஆம் நூற்றாண்டின் இயந்திர மனிதனோடு ஒப்பிட்டு சிலம்பில் அறிவியல் பார்வை என புதிய ஆய்வுப் பாதைக்கு வித்திட்டுள்ளார் நூலாசிரியர்.
மதுரை குறித்து நூலாசிரியர் குறிப்பிடும்போது அப்போதைய மதுரை நகருக்குள் நாம் உல்லாச உலா வரும் வகையில் நமது கற்பனை விரிகிறது.
13 கட்டுரைகளின் தொடக்கத்திலும் முடிவிலும் கட்டுரையின் நோக்கம் குறித்து நூலாசிரியர் சமூகம் சார்ந்த கருத்துகளைப் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.
சிலப்பதிகாரம் குறித்து எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் இந்நூல் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாகத் திகழ்கிறது. இந்த நூலின் மூலம் அந்தக் காலத் தமிழர்களின் பெருமையைப் படித்துப் புரிந்து கொள்வதுடன் அதை அனுபவித்து மகிழ வாய்ப்பளித்த நூல் இது.