நபிகளார் போதித்த நற்பண்புகள்
நபிகளார் போதித்த நற்பண்புகள் - மவ்லவி கே.எம். முகம்மது மைதீன் உலவி; பக். 264; ரூ. 170; சாஜிதா புக் சென்டர், சென்னை-1; ✆ 98409 77758.
வணக்க வழிபாடு, தனிமனிதப் பண்புகள், குடும்பப் பண்புகள், சமூகப் பண்புகள், பொருளியல் பண்புகள், சுகாதார முறைகள் என மனித வாழ்வின் அம்சங்கள் பற்றி நபிகளார் போதித்த நற்பண்புகளில் கணிசமானவற்றை எளியவர்க்கும் புரியும்படியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஒவ்வொன்றுக்கும் அரபி மூலத்துடன் தமிழ் மொழிபெயர்ப்பும், தொடர்ந்து மிகச் சிறப்பான முறையில் விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.
எது சிறந்த தர்மம்? எப்போது செய்ய வேண்டும்? கனவுச் சஞ்சலம் போக்க என்ன செய்ய வேண்டும்? தொழுகையைவிட உணவுக்கு ஏன் முதலிடம்? என்பதற்கான விளக்கங்கள் கிடைக்கின்றன.
நூலில் தனிமனிதப் பண்புகள் பற்றிய பகுதியில், புறம் பேசாதீர்கள் எனத் தொடங்கி, தற்கொலை கூடாது, சிந்தித்துப் பேசுவீர் என எண்ணற்ற போதனைகளுடன், இன்றைய வாழ்வியல் சூழலுக்கொப்ப தக்க விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. குடும்பப் பண்புகளில் கணவன், மனைவி பற்றிய மொழிகளும், குடும்ப வாழ்வு பற்றியவையும் மிகவும் கவனத்திற்கொள்ள வேண்டியவை.
இணை வைப்போருடன் இணைந்து வாழ்வீர், இல்லை என்று கூறாதீர்கள்... என்பன போன்றவற்றை சமூகப் பண்புகளில் குறிப்பிட்டு, ஒவ்வொன்றும் நவிலப்பட்ட காலச்சூழலையும் விளக்கியுள்ளார் ஆசிரியர். பொருளியல் பண்புகளும் சுகாதார முறைகளும் இன்றைய வாழ்வின் தேவைகளைச் சுட்டுகின்றன.
நூலில் தரப்பட்டுள்ள ஹதீஸ்களை அறிவித்த நபித் தோழர்கள், நபித் தோழியர், நபித் தோழர்களிடமிருந்து அறிவிக்கும் அறிஞர்கள் பற்றிய அறிமுகமும் பயனுள்ளது.
முஸ்லிம்கள் மட்டுமல்ல; அனைவரும் படித்தறிய வேண்டிய நூல். தவிர, தனிமனித ஒழுக்கத்தை, நேரிய வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள உதவக் கூடிய நூலும்கூட!