மருதங்கூட்டத்தான்
மருதங்கூட்டத்தான் - ஜெ.ராஜாகனி; பக்.80; ரூ.80; கோதை பதிப்பகம், திருச்சி; ✆ 9080870936.
மருதங்கூட்டத்தான் - ஜெ.ராஜாகனி; பக்.80; ரூ.80; கோதை பதிப்பகம், திருச்சி; ✆ 9080870936.
ஒருவர் கற்ற கல்வி அவருக்கு ஏழு பிறவிக்கும் பலனளிக்கும்; பாவங்கள் தலைமுறை கடந்தும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊழ்வினைக்கு இந்நூலின் முதல் தலைமுறை நாயகன் மருதப்பன் தொட்டு அவரது வழி வந்த தலைமுறைகளின் ஆண் வாரிசுகள் உள்பட நிகழ்கால எட்டாம் தலைமுறை வாரிசான ராஜா தேவரும் விதிவிலக்கல்ல என்ற கருத்து மையப்படுத்தப்பட்டுள்ளது.
18-ஆம் நூற்றாண்டில் கோலோச்சிய மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், காதலின் பொருட்டு வேறுவழியின்றி சூழ்நிலை காரணமாக ராஜ துரோகத்தில் மருதப்ப தேவர் ஈடுபடுகிறார். துரோகத்தின் பலனை மருதப்ப தேவரும் அவரது பரம்பரையும் எட்டாம் தலைமுறை வரையிலும் அனுபவிக்கின்றனர். விதியின் பிடிக்குள் அகப்பட்ட எட்டாம் தலைமுறை கடைசி வாரிசான ராஜா தேவர், தனது முன்னோர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவர்களது சிலைகளை பாராமரித்து வருவது சிறப்பு.
முன்னோர்களை நினைவு கூர்ந்திருப்பதும், அவர்களது வெற்றி, தோல்வி, துரோகம், அருமை, பெருமை, வீழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்திருப்பதும் ஒரு குலத்தின் வரலாற்றை எடுத்தியம்புகிறது. ஆன்மிகத்தில் அகோரியாய் பயணிக்க ராஜா தேவர் விரும்புகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட விதி அதுதான் எனில், அதை மாற்ற யாரால் இயலும்? உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய குறும்படம், திரைப்படம் தயாரிப்பதற்குரிய கதைக் களத்தை இந்நூல் கொண்டுள்ளது.