கதை சொல்லும் குறள் (மூன்று பாகங்கள்)
கதை சொல்லும் குறள் (மூன்று பாகங்கள்) - முனைவர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அறத் துப்பால் பக்.224; ரூ.350/-, பொருட்பால் பக்.416; ரூ.650/-, காமத்துப்பால் பக்.168; ரூ.250/. சாந்தி சிவா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 014, ✆ 88070 41841.
திருக்குறள் கதைகள், குறள் சொல்லும் கதைகள் வரிசையில் இப்போது வெளிவந்திருக்கிறது சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய 'கதை சொல்லும் குறள்'. வாரந்தோறும் 'தினமணி'யின் இணைப்பான மகளிர் மணியில் தொடராக வெளிவந்தபோதே பரவலான வரவேற்பைப் பெற்றது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
தொன்று தொட்டுத் தமிழ் இலக்கியங்களில் திருக்குறளின் தாக்கம் இருந்து வந்திருக்கிறது. சங்க இலக்கியம், சமய இலக்கியம், காப்பியங்கள் என்று தொடங்கி சமீபகாலத் திரைப்படங்கள் வரை ஏதாவது ஒருவகையில் ஏதாவது ஒரு குறளின் தாக்கம், அல்லது நேரடியான பதிவு இருந்து வருவதைப் பார்க்கிறோம். அப்படி இருக்கும்போது சிறுகதைகள் மட்டும் அதற்கு
விதிவிலக்காக இருந்துவிட முடியுமா என்ன?
திருக்குறளை மையமாக அல்லது அடிப்படையாக வைத்துப் பலர் கதை எழுதி இருக்கிறார்கள். திருக்குறள் கதைகள் என்ற பெயரிலேயே பருவ இதழ்களில் தொடர்கள் வந்ததுண்டு. அந்தக் கதைகள் அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிப்பவையாகவும் இருந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் 'கதை சொல்லும் குறள்' எந்தவிதத்தில் வேறுபடுகிறது? அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சராசரி மாந்தர்களையும், அவர்களது எதார்த்தமான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள்தான் 'கதை சொல்லும் குறள்' என்கிற இந்தப் படைப்பை வித்தியாசப்படுத்துகிறது.
அதிகாரத்துக்கு ஒரு குறள் என்று தேர்ந்தெடுத்து, 133 சிறுகதைகளைப் படைத்து, முத்து கோப்பது போல அவற்றைத் தொகுத்து 'கதை சொல்லும் குறள்' என்கிற புத்தக வடிவம் வழங்கி இருக்கிறார் சாந்தகுமாரி சிவகடாட்சம். நீதியரசர் ஆர்.மகாதேவன், மறைந்த தமிழ்ப் பேரறிஞர் ஒளவை நடராசனார், வள்ளுவத்தில் கரைதேர்ந்த முனைவர் அரங்க. இராமலிங்கம், பாமரனுக்கும் தமிழ் போதிக்கும் பேராசான் பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோர் அணிந்துரை எழுதி அலங்கரித்திருக்கும், கதை வழி குறள் சொல்லும் படைப்பு இது!