கதவுகளில் கலந்த கலாச்சாரம்
கதவுகளில் கலந்த கலாச்சாரம்; கே.பத்மலெக்ஷ்மி, பக். 176; ரூ. 180; பேசும் புதிய சக்தி; திருவாரூர்-610001; 94897 73671.
'பேசும் புதிய சக்தி' இதழில் தொடராக வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.
நாடெங்கிலும் உள்ள கோயில்கள், அரண்மனைகள், வீடுகளின் கதவுகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், கதவுகளில் இருந்த கலாசாரப் பின்னணி குறித்து வித்தியாசமான முறையில் விவரித்துள்ளார் நூலாசிரியர்.
'ஆதிகாலத்தில் மனிதன் வனவிலங்குகளிலிருந்தும், இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் தன்னைக் காக்கும் கவசமாக வீடுகளையும், கதவுகளையும் உருவாக்கினான். காலப் போக்கில் அவை சொர்க்கத்தின் வாயிலாக, தெய்வமாக, வெளிச்சத்தின் பிறப்பிடமாகக் கருதப்பட்டன. நாகரிக வளர்ச்சி ஏற்பட்டபோது, கதவுகளில் பல வடிவங்கள் வந்தன. தயாரிக்கும் பொருள்கள் மாறுபட்டன. கதவுகள் என்பவை ஒவ்வொரு பகுதியின் இனத்தின், மனிதனின் உணர்வுகளை, சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்' என்கிறார் நூலாசிரியர்.
கோட்டைகள், அரண்மனைகளில் எதிராளிகள் உள்நுழையாதபடி கண்காணிக்கும் கதவுகள், அரசியின் தனிமையை பாதுகாக்கும் கதவுகள்.. என்று வகை, வகையாகப் பிரித்து கதவுகள் அமைக்கப்பட்டதும் கூறப்பட்டுள்ளது.
காரைக்குடியில் பாரம்பரியம் மிக்க செட்டிநாட்டு வீடுகளின் விவரங்களையும் விளக்கியுள்ளார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதவுகளின் வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை அருமையாக அலசுகிறது இந்த நூல். கட்டுரைகளுக்குரிய புகைப்படங்களை இணைத்திருப்பது சிறப்பு.