செந்தமிழின் மகள் சிந்தி மொழி
செந்தமிழின் மகள் சிந்தி மொழி (சூடாவாடி சிந்தி எழுத்துகள்)-முனைவர் மலையமான்; பக்.148; ரூ.150; அன்பு பதிப்பகம், சென்னை-18; ✆ 044- 24996611.
'3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் தமிழருக்கு உரியது.
இயற்கைச் சீற்றத்தால் அழிந்த நாகரிகத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் அயலகங்களில் குடியேறினர். பலர் மதம் மாற்றப்பட்டனர். அந்தத் தமிழர்களின் மொழியில் அரபி, பெர்சிய மொழி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் முதலிய மொழிகள் கலந்தன. அவர்கள் சிந்தி மொழியினர் எனப்பட்டனர்.
சிந்திமொழி சம்ஸ்கிருதத்துக்கு உரியது எனப்பட்டது' என்றுரைக்கிறது இந்த நூல்.
பர்சோ கித்வானி என்ற சிந்திமொழி அறிஞர் தனது தாய்மொழியை ஆய்வு செய்தபோது, அது தமிழுடன் தொடர்புடையது என்பதை அறிந்தார். அவரது அரிய குறிப்புகளை நூலாசிரியர் ஆய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.
தமிழுக்கும் சிந்தி மொழிக்கும் உள்ள தொடர்பை முழுவதுமாக விளக்கியுள்ளார். இதோடு, தமிழின் பன்முக விழுமியம், இந்தியா முழுவதும் பரவியிருந்தது, மறையா சிறப்பு, வரலாறு மொழிக் கூறும், சிந்தி இலக்கியம் போன்றவற்றை விரிவாக விளக்குவதுடன், கித்வானி, குலாம் அலி அல்லானா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் குறித்து பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கித்வானியின் கடிதங்கள் அப்படியே இடம்பெற்றுள்ளன. சிந்தி மொழியில் இரா. மதிவாணன் கண்டறிந்த தமிழ்ச் சொற்கள் குறித்த கட்டுரையில் அரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையின் பின்புறமும், மேலதிகத் தகவல்களுக்கான குறிப்பெடுத்த நூல்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆர்வலர்கள் படிக்க வேண்டியதொரு நூல் இது.