ஒரு ஞானக்கிறுக்கனின் பத்து முகங்கள் - தன் வரலாறு
ஒரு ஞானக்கிறுக்கனின் பத்து முகங்கள் - தன் வரலாறு - சிவராம் காரந்த், தமிழில் - சிற்பி, பக்கங்கள் - 408, விலை - ரூ. 450, அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், மாக்கினாம்பட்டி, உடுமலை சாலை, பொள்ளாச்சி - 642 003, ✆9976144451.
இந்திய இலக்கியத்தின் பேராளுமைகளில் ஒருவரான கன்னட எழுத்தாளர் சிவராம் காரந்த் எழுதிய தன் வரலாற்றை நல்ல தமிழில் தந்திருக்கிறார் சிற்பி.
குழந்தைப் பருவ நினைவுகளில் தொடங்கும் காரந்த், வால் நட்சத்திரத்தின் பலனையும் முதலில் பார்த்த பெருந்தீயையும் பள்ளியில் ஆய்வகத்தில் எடுத்த களவையும் நினைவுகூர்கிறார்.
பிரபஞ்சத்தின் கடவுள் வசிக்கும் ஊர் என்று காசி பற்றி அவர் செய்யும் அறிமுகமே அலாதியானது. சமூகத்தோடு நேருக்கு நேர் பற்றி எழுதும்போது தனிமனிதனாக முயன்றதைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.
இதழியல் அனுபவங்களை, அதுவும் கவிதைக்கான தேவை பற்றியும் கடன்களைப் பற்றியும் காரந்த் விவரிக்கும் விதம் சிறப்பு. நாடக அரங்கில், பயணமே வாழ்க்கை, மேலும் பயணங்கள் ஆகியவற்றிலும் அனுபவங்கள் நிரம்பி வழிகின்றன.
அரசியல் தொடர்பாக மிகக் கூர்மையான பார்வைகளை முன்வைக்கிறார். சீனா விஷயத்தில் நம் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியதாக நேருவைக் கடுமையாக விமர்சிக்கும் அதேவேளை, 'அவரை மறுத்து அவர் பெயரைக் கெடுத்துவந்த தலைவர்களை நாம் ஊக்குவித்தோம். எனினும், அவருடைய திறமையில் நூறில் ஒரு பங்குகூட இல்லாதவர்கள் நமக்குத் தலைவர்களாகிவிட்டார்கள்' என்றும் குறிப்பிடுகிறார்.
கிராம மேம்பாடு, கல்வியும் மொழியும், நாடகம், இசை, நடனம், கலை, உரைநடை, அரசியல், குடும்பம், தொழில் என எழுத்தைத் தாண்டி சிவராம் காரந்திற்குத்தான் எத்தனை முகங்கள்? எத்தனை திறன்கள்?
தன் வரலாறு என்றாலும் வெறும் நாள்குறிப்பைப் போல மாறிவிடாமல் நாவலைப் போல விறுவிறுப்பாகக் கொண்டுசென்றிருக்கிறார் காரந்த்.