நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு குறித்து என்டிஏ அறிவித்துள்ளது.
புது தில்லி: 2026-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.
neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்றும், அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 11-ஆம் தேதி நிறைவடைந்தது. இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தியா முழுவதும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
NTA has announced the release of hall tickets for the NEET exam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.