அங்கம் நிறைந்த சங்கம்
அங்கம் நிறைந்த சங்கம் - முனைவர் வைகைச்செல்வன்; பக்.168; ரூ.200; நூல் குடி பதிப்பகம், சென்னை-17; ✆ 99404 81276.
சங்க இலக்கியங்கள் மீது அளவற்ற பற்று கொண்டவர் முன்னாள் அமைச்சரான நூலாசிரியர். சிறந்த செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் இருந்து குறுந்தொகை, நற்றிணை,
புறநானூறு, கலித் தொகை, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களில் உள்ள பாடல்களில் இருக்கிற செவ்வியல் தன்மையும், அழகுணர்ச்சியும் குறித்து நூலாசிரியர், வார இதழ் ஒன்றில் 25 வாரங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
'மகரந்தப் பூக்கள்' எனும் தலைப்பில் தொடங்கி, 'பருவமே புதிய பாடல் பாடு' தலைப்பு வரையிலான கட்டுரைகளில், சங்க இலக்கியத்தின் பல்லாயிரம் ஆண்டு கால பழம் பெருமைகளை, தமிழின் நீண்ட கால இலக்கிய வளத்தை இந்த நூலில் நூலாசிரியர் திறம்பட எடுத்துரைத்துள்ளார். காதல், பெண்மையைப் போற்றுதல், தமிழர்களின் வீரம், புலவர்களின் தமிழ்ப் பற்று, இயற்கையின் மீது கொண்ட பற்றுதல், கடவுள் மீதான பக்தி... என அன்றைய தமிழர்களின் பல்வேறு பரிமாணங்களை சுருக்க வடிவில், எளிய தமிழில் நன்கு விவரித்துள்ளார்.
'தலைவன்- தலைவி' என அன்றைய காதலர்களின் உரையாடலைப் படிக்கும்போது, தமிழர்கள் வீரத்தோடு காதலையும் நேசித்துள்ளது தெளிவாகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் அதற்கேற்ற சித்திரங்களை அழகுற சேர்த்திருப்பது நூலுக்கு மெருகேற்றுகிறது. தமிழ் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.