எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்
எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் (கடத்தலும் காதலும்) - தோ.சமயமுரளி; பக். 262; ரூ.300; பிரதீபா பப்ளிஷர்ஸ், கோயம்புத்தூர் - 641109; ✆ 9585539988.
தஞ்சை மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர், 2008-இல் ஐபிஎஸ் அதிகாரியாக சுங்கத் துறையில் பொறுப்பேற்றது முதல் தனது பணியில் கண்ட அனுபவங்களின் தொகுப்பாக இந்த நாவலை கற்பனை நயம் கலந்து சுவாரசியம் குறையாமல் தந்திருக்கிறார்.
கள்ளக் கடத்தல்கள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து விளக்குவதோடு, நாவல்போல் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. கடத்தல் தொழிலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற பல நபர்களை நேர்காணல் செய்து தகவல்களை சேகரித்திருப்பதால் ஒரு யதார்த்தமான திரைப்படம் பார்க்கும் உணர்வை நாவல் ஏற்படுத்துகிறது. நாவலின் நாயகன் ரோனி, நட்புக்காகவும், தனது மனைவியை காப்பாற்றவும் கடத்தல்காரனாக மாறியிருக்கிறான். அவன் திருந்தி வாழ போலீஸ் அதிகாரி கிருஷ்ணா உதவுகிறார்.
கஸ்டம்ஸில் இன்பார்மர்களுக்கு வழங்கப்படும் சன்மானத்தைப் பற்றி விளக்குகிறார். '20 கிலோ தங்கம் இருக்கிற இடம் பற்றி தகவல் கொடுத்தா, அதோட மதிப்புல 20 சதவீதம் கமிஷனா கிடைக்கும்' என்று 'நல்ல வழியில்' பிழைக்க வழிகாட்டுகிறார்.
நூலாசிரியர் 'புதிய பார்வை' என்ற குறும்படத்தையும், 'கனல்' என்ற திரைப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். கடத்தல் மற்றும் சுங்கத்துறை குறித்து இதுவரை வெளிவராத பல்வேறு தகவல்கள் அடங்கிய அபூர்வமான நாவல். வாசிப்பில் புதிய அனுபவம் காணலாம்.