மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டபோது குடியரசுத் தலைவர் அமைதி காத்தது ஏன்? - மம்தா பானர்ஜி
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டபோது குடியரசுத் தலைவர் அமைதி காத்தது ஏன்? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார்ச் 7) கலந்துகொண்டார். ஆனால், அந்நிகழ்ச்சியானது ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.
இந்த தீடீர் மாற்றம் அரசியல் விவாதமாக மாறிவிருக்கிறது. அதற்கான காரணம் என்னவாயின், நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றதாகவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமெனவும் பரவலாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியரசுத் தலைவரின் வருகையின்போது, அவரை வரவேற்க மமதா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்தவொரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவையனைத்தையும், நிகழ்ச்சியில் மேடையேறிய குடியரசுத் தலைவர் தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, இதற்கு எதிர்வினையாக மம்தா பானர்ஜி அளித்துள்ள பதிலில், “மக்களின் உரிமைக்காகவும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளிலும் நான் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இவையே எமது முதன்மைப் பணிகளாகும்.
காவிக் கட்சியானது பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியினரின் உரிமைகளை எப்படிப் பறிக்கிறது? என்பதைப் பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் (குடியரசுத் தலைவர்) இருக்கிறீர்களா?
குடியரசுத் தலைவர் முர்மு, பழங்குடியினரைப் பற்றி பேசும் அதேவேளையில், மணிப்பூரிலும் பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் பழங்குடியின மக்கள் துன்புறுத்தப்பட்டு இன்னல்களுக்கு ஆளானபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?” என்று மம்தா பானர்ஜி கேட்டார்.