கூத்துக்கலைஞர் புரிசை கண்ணப்பத் தம்பிரான்
கூத்துக்கலைஞர் புரிசை கண்ணப்பத் தம்பிரான் - தொகுப்பாசிரியர் வெளி ரங்கராஜன்; பக்.176; ரூ.200; காவ்யா, சென்னை-24; ✆044-2372 6882.
புரிசை கண்ணப்பத் தம்பிரான் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த கூத்துக் கலைஞர். வீராச்சாமி தம்பிரானுக்கு ராகவன் தம்பிரான், விஜய தம்பிரான், கிருஷ்ண தம்பிரான், துரைசாமி தம்பிரான் என்கிற 4 புதல்வர்கள். இவர்களில் துரைசாமியின் மகன்தான் கண்ணப்ப தம்பிரான். இவரின் பாட்டனார் ஏரியின் மேல் நடப்பதாக சவால்விட்டு வென்றதாகவும், இதன்பலனாக, 60 கிராமங்களின் மிராசை ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றார் என்றும் வெங்கட் சாமிநாதன் பேட்டியிலிருந்து அறிய முடிகிறது.
தனது பெரியப்பாவான ராகவத் தம்பிரானிடம் நேரடியாகவும், உள்வாங்கிக் கொண்ட உத்திகளுடனும் கற்றதும் பெற்றதும் ஏராளம் என்பதையும் வெளிப்படுத்துகிறது நேர்காணல்.
கண்ணப்பத் தம்பிரான் கூத்துக் கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதை வெளி ரங்கராஜன், பேரா.சே.ராமானுஜம், இந்திரா பார்த்தசாரதி, ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, மு.ராமசாமி, கே.ஏ.குணசேகரன் உள்ளிட்ட நிகழ்த்துக்கலை ஆர்வலர்களும், வி.ஆர்.தேவிகா, வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட விமர்சகர்களும் எழுதிய கட்டுரைகள் மூலம் தம்பிரானின் பன்முகத் தன்மையை உணர முடிகிறது.
ஆங்கிலத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரையை தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள். பேட்டியில் கண்ணப்ப தம்பிரான் தனது குடும்பத்தினர் பற்றியும் வாசிப்பு பழக்கம் குறித்தும், திரௌபதி வஸ்திராபகரணம் அளவுக்கதிகமாக நீண்ட காட்சியாக அமைந்திருப்பது குறித்த விளக்கம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. கண்ணப்ப தம்பிரான் எழுதிய 'பாஞ்சாலி சபதம்' கூத்து 55 பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது. கூத்து நடத்துவோருக்கு அரிய தொகுப்பு. கண்ணப்பத் தம்பிரானைப் பெருமைப்படுத்தும் நூல் இது.