அரிமாவின் அடிச்சுவட்டில் (தமிழ்மாமணி மன்னர் மன்னன் வாழ்வியல் பக்கங்கள்)
அரிமாவின் அடிச்சுவட்டில் (தமிழ்மாமணி மன்னர் மன்னன் வாழ்வியல் பக்கங்கள்) - கவிஞர் புதுவை கோ.செல்வம்; பக். 224; ரூ.225; நிவேதிதா பதிப்பகம், சென்னை-92; 89393 87276.
தமிழர்களின் வீரத்தை உலகுக்குப் பறைசாற்றிய பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனின் வாழ்க்கை வரலாறே இந்த நூல். பாரதிதாசனின் அடிச்சுவட்டில் வாழ்ந்த மன்னர் மன்னன் குறித்து அவரின் மகனானநூலாசிரியர் எழுதிய நூல்.
"நீ நிறைய படிக்க வேண்டும். நிறைய சிந்திக்க வேண்டும். நிறைய நிறைய புது நூல்களைப் படைக்க வேண்டும். அது உன் சமுதாயக் கடமை'' என்று மன்னர் மன்னன் தனக்கு அறிவுறுத்தியதாகவும், அவர் வாழ்ந்தவரை அது நடைபெறவில்லையென்ற நூலாசிரியரின் வரிகளைப் படிக்கும்போது, அவரது ஏக்கம் நமக்கும் ஏற்படுகிறது.
மன்னர் மன்னன் 2020-ஆம் ஆண்டு ஜூலை 6-இல் மறைந்தார். அதற்கு அடுத்த சில நாள்களில் இருந்து அவரது பிறப்பு முதல் இறப்பு வரையும், கல்வி கற்றல், வானொலிப் பணி, தமிழ்ப் பணி, சமூகப் பணி, குடும்பம், நட்பு..... என்று பல்வேறு தலைப்புகளில் 50 நாள்கள் நூலாசிரியர் முகநூலில் நாள்தோறும் எழுதிய பதிவுகளைத் திருத்தி, படங்களுடன் மேம்படுத்தி வெளியிட்ட தொகுப்பே இந்த நூல். மன்னர் மன்னனின் தமிழ்ப் பணியும், சமுதாயத் தொண்டும் நூலைப் படிக்கும்போது, மெய்சிலிர்க்க வைக்கின்றன.
தமிழர் வரலாற்றில் பாரதிதாசனின் பங்கும், அவரது வழியில் மன்னர் மன்னனின் பங்களிப்பும் ஒருசேர படிக்கும் விதத்தில் இந்த நூல் அமைகிறது. தமிழ்ப் பற்றாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.