தம்பி, நான் ஏது செய்வேனடா! பாரதி பற்றி பாரதிபுத்திரன்
தம்பி, நான் ஏது செய்வேனடா! பாரதி பற்றி பாரதிபுத்திரன்; நேர்காணல்- பா.இரவிக்குமார், இரா.பச்சியப்பன்; பக்.212; ரூ.220; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044- 2489 6979.
பாரதியார் பற்றி எத்தனை நூல்கள் வந்தாலும், ஒவ்வொன்றிலும் புதுமைகள் காணப்படும். இந்த நூலிலும் பல்வேறு புதுப்புது விஷயங்களை அறிய முடிகிறது. பாரதியாரை நேசித்து, அவரது பெயரையே தன்னுடைய பெயராகத் தாங்கிக் கொண்டுள்ளவர் "பாரதிபுத்திரன்'. இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதோடு, பல்வேறு நூல்களையும் எழுதியவர். பாரதியாரின் தீவிர பற்றாளர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூலை மேம்படுத்தி, இரண்டாம் பதிப்பாக வெளியாகியிருப்பதே இந்த நூல்.
பாரதிபுத்திரனின் பார்வையில் பாரதியார் எப்படி என்பது குறித்து பேராசிரியர்களான நூலாசிரியர்கள் கண்ட நேர்காணல்களின் தொகுப்பே இந்த நூல். தமிழையும் பாரதியாரையும் பிரிக்க முடியாது என்பதற்கிணங்க, பாரதியாரின் விடுதலை வேட்கை, தமிழ்ப் பற்று, பெண் விடுதலை, சமுதாய விழிப்புணர்வு என்று பல கோணங்களில் அவரது சிறப்பை ஆய்வு செய்கிறது இந்த நூல்.
கம்பன், இளங்கோஅடிகள், திருவள்ளுவர்... என்ற பெருங்கவிஞர்கள் வரிசையில் பாரதியாரும் இடம்பெறுவது அவசியம் என்று ஞானி தனது அணிந்துரையில் கூறியிருப்பது சிறப்பு. நேர்காணல் என்றாலும், பாரதியாரின் பாடல்களின் முக்கிய வரிகளும், அதற்கான விளக்கங்களும் பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றிருப்பது நூலின் தனிச்சிறப்பு.
பாரதியாரைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவருக்கு விடையளிக்கும் வகையிலும் இந்த நூல் விளங்குகிறது. தமிழ்ப் பற்றாளர்கள், பாரதி நேசர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.