அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது
அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது - நிவேதிதா லூயிஸ்; பக். 208; ரூ. 240; கிழக்கு பதிப்பகம், சென்னை- 17; ✆ 044- 4200 9603.
பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
சென்னையின் பிரதான சாலையிலிருந்த ஆங்கிலேயர் நீல் சிலை இன்று அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுவிட்டது. அந்தச் சிலையை அகற்றப் போராடிய சாமானியர்களை இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஆனால், வரலாறு என்பது நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டிய பிரவாகம். அதை நிறைவேற்றுகிறது இந்நூல். நீல் சிலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமி அம்மாக்கண்ணுவின் அரசியல் பயணம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அந்தமான் தீவுகளில் மானுடவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மதுமாலா சட்டோபாத்யாய, நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன், பேரழகி நடிகை சாந்தா ஆப்தே, சென்னையில் பெண் கல்வி வளர்த்த ஸ்காட்லாந்தை சேர்ந்த இஸபெல் பிராண்டர், திரையிசைப் பாடகர் டி.எம்.செüந்தரராஜனின் பணிகளை ஆவணப்படுத்தும் விஜயராஜ், சென்னையின் தொடக்க கால கிறிஸ்தவப் பிரமுகர்களான தனகோடி ராஜு, பூந்தமல்லி ராஜகோபால் எனப் பலரும் அறிய வேண்டிய மனிதர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர்.
மறந்துபோன சாதனையாளர்களைத் தேடிக் கண்டறிந்து வரலாற்றுப் பதிவாக்கி இருக்கும் நூலாசிரியரின் ஈடுபாடும், தெளிவான எழுத்துநடையும் தொடர்ந்து படிக்கத் தூண்டுகின்றன.
'மலாக்காப் பிரவேசத் திரட்டு' போன்ற சிங்கப்பூரில் வெளியான அந்தக்கால பிரசுரங்கள் குறித்தும், சென்னை குஜிலி இலக்கியத்தின் பின்னணி குறித்தும் அபூர்வத் தகவல்கள் பல நூலில் உள்ளன. சாதனையாளர்களின் சரித்திரத்தை வெளிக்கொணரும் நூல் இது.