தேசியக்குயில் டி.கே.பட்டம்மாள்
தேசியக்குயில் டி.கே.பட்டம்மாள் - தாமல் கோ.சரவணன்; பக். 138; விலை 220; நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா நேரு பவன், 5 இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, வஸந்த் குஞ்ச், புது தில்லி 110070.
கர்நாடக இசையின் முப்பெரும் தேவியர் என்று அறியப்பட்டவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள்.
இதில், தேசப்பற்று பாடல்களாலும் தமிழிசை பாடல்களாலும் பட்டம்மாள் தனித்துவம் பெற்றவர்.
தந்தையிடமிருந்து நாட்டுப்பற்றையும் தாயிடமிருந்து இசையையும் சொத்தாகப் பெற்றவர் பட்டம்மாள். சிறுமியாய் இருந்த காலம் முதலே விடுதலை வேண்டிய பாரதியின் தமிழ்ப் பாடல்களை இசை மேடைகளில் அவர் பாடினார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலை வேட்கையைத் தூண்டிய தமிழ் கீதக் குரல்களில் முதன்மையானது டி.கே.பட்டமாளினுடையது. காங்கிரஸ் கட்சியின் எண்ணிலடங்கா பிரசார நிகழ்ச்சிகளின் துவக்கமாக பட்டம்மாளின் பாட்டுகள் அமைவது வழக்கமாக இருந்தது.
தமிழ் பாடல்களை மேடையில் பாடுவது அரசியலாகிவிட்டிருந்த காலத்துக்கும் முன்பே, எந்த தயக்கமும் இன்றி தமிழ் பாடல்களை தனது நிகழ்ச்சிகளில் அளித்த பெருமை இவருக்கு உண்டு.
அவரது வாழ்வில் எத்தனையோ சரித்திர மைல்கற்கள். பல்வேறு தனியார் அவதாரங்களுக்குப் பிறகு 1938-இல் சென்னை மாகாண அரசு சார்பில் வானொலி நிலையம் தொடங்கப்பட்டபோது முதல் நிகழ்ச்சி பட்டம்மாளின் இசைக் கச்சேரிதான்.
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு இந்தியா சுதந்திரம் பெற்ற நிகழ்வை, "ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று மகாகவி யின் வரிகளை வானொலியில் பாடிக் கொண்டாடிய முதல் குரல் இவருடையதுதான்.
தமிழிசையும் தேசியமும் கலந்த டி.கே.பட்டம்மாளின் இசை வாழ்வுப் பயணத்தின் பல நிகழ்ச்சிகள், சமகால சரித்திர சம்பவங்களுடன் இணைத்து எழுதப்பட்ட அருமையான நூல்.