எளிய தமிழில் பல்லவர் வரலாறு
எளிய தமிழில் பல்லவர் வரலாறு (மூலம்- மா.இராசமாணிக்கனார்; எளிய தமிழில் - அச்யுதன் ஸ்ரீதேவ்); பக். 223; ரூ.260; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; ✆ 8148066645
பிற்காலச் சோழர்களின் சிறப்புமிக்க ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது பல்லவர்களின் ஆட்சி என்பதை எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர். முதற்கால, இடைக்கால, பிற்காலப் பல்லவர்களின் காலத்துடன் தொடங்கும் நூல் சிம்ம விஷ்ணு முதல் மூன்றாம் நந்திவர்மன் வரை அனைத்து பல்லவ அரசர்களுடைய ஆட்சிக்கால சிறப்புகளையும் விளக்குகிறது. அத்துடன் இசை, நடனம், கட்டடக் கலை, ஓவியம், சிற்பம், இலக்கியம் ஆகியவற்றுக்கு பல்லவ அரசர்கள் அளித்த முக்கியத்துவத்தையும் அழகுற எடுத்துக்காட்டுகிறது.
கற்றளிகளுக்கு பல்லவ அரசர்கள் முக்கியத்துவம் அளித்தது குறித்தும், புதிய கோயில்கள் மட்டுமல்லாமல் பழைய செங்கல் கோயில்களைக் கற்றளிகளாக மாற்றியது குறித்தும் ஆசிரியர் விளக்குகிறார். பல்லவர்களின் போர், நாணயம், நீர்ப்பாசன முறை, சைவ-வைணவத்தின் எழுச்சி உள்ளிட்ட பலவித விவரங்களை இலக்கியத் துணையுடனும், வரலாற்றுச் சான்றுகளின் துணையுடனும் ஆசிரியர் நிறுவுகிறார். பல்லவ அரசர்களின் பட்டியல் காலவரிசையுடன் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு.
காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த பண்டைய வெளிநாட்டுப் பயணிகள் குறித்த விவரங்களும், அவர்களது பயணக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு மட்டுமல்லாமல் சாதாரண வாசகருக்கும் பல்லவர் வரலாற்றை விளக்குகிறது.