யானைகளின் வருகை
யானைகளின் வருகை; கா.சு. வேலாயுதன்; பக்.243; ரூ.300; கதை வட்டம், தமிழ் இல்லம், கோவைப்புதூர் கோவை- 641042; ✆ 9994498033.
வனச் சூழலின் வளமையை பெருக்குவதிலும், தக்க வைப்பதிலும் அதி முக்கியமான யானைகளைப் பற்றியும், அதன் பல்லுயிர் பெருக்கக் காரணிகள் பற்றியும் எடுத்துரைக்காமல் வனத்தின் மொத்த சாராம்சத்தையும் வாசகர்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் நூலாசிரியர்.
வன உயிரினக் காப்பகங்களை எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அமைப்பதனால் ஏற்படும் எதிர் விளைவுகள்தான் விலங்குகளுக்கும், மனிதனுக்கும் ஏற்படக் கூடிய மோதலுக்கான மூல காரணம் என்பது சமீபத்திய நிகழ்வுகள் மூலம் விவரிக்கப்பட்டிருக்கிறது. உயிரினங்கள், காடுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கக் காரணமாக இருக்கக் கூடிய இயற்கை வளங்கள்
அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களால் எப்படி சூறையாடப்படுகின்றன என்பதும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தன்னார்வ அமைப்புகள், சூழலியல் ஆர்வலர்களின் முன்னெடுப்புகளுக்கு பின்னால் எத்தனை அரசியல் ஒளிந்திருக்கிறது, அதனால் யார் யாருக்கெல்லாம் லாபம் என்பதையும் கூறி இருக்கிறார் நூலாசிரியர்.
கூடலூரில் தங்கும் விடுதிகளில் மான் கறி விருந்து ஒரு கட்டத்தில் சர்வ சாதாரணமாக கிடைக்கப் பெற்றதும், 22 கிராம் பாம்பின் விஷம் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு
வதும், விலங்குகள் நுட்பமாக வேட்டையாடப்படுவதும், மூங்கில் மரங்கள் கொள்ளையடிக்கப்படுவதும் வனத்தின் வாடிக்கை நிகழ்வுகளாக மாறிவிட்டது ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
இயற்கையின் கொடை மனிதர்களால் சுரண்டப்படுவது குறித்து தெளிவாக கூறுகிறது இந்த நூல்.