சிவகங்கைச் சிங்கங்கள்
சிவகங்கைச் சிங்கங்கள் - குன்றில் குமார், பக்.224, ரூ.250, சங்கர் பதிப்பகம், சென்னை- 49; ✆ 044- 2650 2086.
தேசியத்துக்காகவும், தெய்வீகத்துக்காகவும் உயிர்நீத்தவர்களில் முக்கியமானவர்கள் மருது சகோதரர்களான சிவகங்கை சீமையின் தளபதிகள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன்னுரிமைக்காக போரிட்டவர்களில் தனித்துவம் மிக்கவர்கள். 17 தலைப்புகளில் அவர்களது தனித்துவத்தை விளக்கும்வகையில் நூல் அமைந்துள்ளது.
ராமநாதபுரத்தில் மருது சகோதரர்களின் இளம்பருவ சம்பவங்கள், அவர்கள் சிவகங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சூழல், அவர்கள் ஆங்கிலேயருடன் காட்டிய நட்பு, உரிமைக்காகப் போரிட்ட வீரம்... என சம்பவங்களை நூலாசிரியர் விவரித்திருக்கும் விதம் பாராட்டும் வகையில் உள்ளது.
மன்னர் முத்துவடுகநாதர் வேட்டைக்குச் சென்றபோது தாக்க வந்த புலியை சின்னமருது விரட்டியடித்ததையும், ஓடிய புலி திரும்ப வந்து தாக்கியபோது பெரியமருது அதன் வாயைப் பிளந்து கொன்றதையும் படிக்கும்போது இருவரின் தீரம் மெய்சிலிர்க்கவைக்கிறது.
சிவகங்கையின் முக்கிய நபர் சுங்கக் கட்டணத்தை கட்டாததால் கோபமடைந்த சேதுபதி மன்னரின் எதிர்பாராத நடவடிக்கையும், அதை சின்ன மருது எதிர்கொண்டு வெற்றி கொண்டதையும் நூலாசிரியர் நேர்த்தியாக விளக்கியிருக்கிறார்.
சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எப்படி அன்பு செலுத்தி வாழ்ந்தார்கள் என்பதற்கு கர்னல் புல்லர்டனை மேலூரில் சின்னமருது சந்தித்த சம்பவத்தை நூலாசிரியர் உரையாடலாக விவரித்திருப்பது அருமை. மருது சகோதரர்களது குரு வெள்ளையன் சேர்வை வரலாறும் விளக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்களின் முழு வரலாற்றை இந்த நூலைப் படித்தாலே போதும்.