ரகுநாதன் நாவல்கள்
ரகுநாதன் நாவல்கள் - தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம்; பக்.684; ரூ.700; காவ்யா பதிப்பகம், சென்னை-24; ✆ 044- 2372 6882.
பத்திரிகையாளர், விமர்சகர், கவிஞர், நூலாசிரியர், பொதுவுடமைவாதி, இலக்கிய பெருமன்றத்தை உருவாக்கியவர் என பன்முகத் தன்மை கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவர் எழுதிய நான்கு நாவல்களின் தொகுப்பு இந்த நூல்.
கன்னிகா (1950) நவீனத்துவத்தின் குரலை எதிரொலிக்கிறது. வாசிக்க அலுப்புத் தட்டாத எழுத்து. வெளிவந்த காலத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.
முதலிரவு (1949) நாவல் காமம் குறித்து பேசப்பட்டதால் விமர்சனத்துக்கு உள்ளாகி தடை செய்யப்பட்டதும் உண்டு. எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தப்பட்ட நாவல் என்ற நிலையில் கைவிடப்பட்டது. புதுமைப்பித்தன் மீதியையும் எழுதச் சொன்னதன்பேரில் முழுவதும் ரகுநாதன் எழுதினார். 'மனதோடு கிடக்க வேண்டிய விஷயங்களை இப்படி எழுதலாமா?' என்ற குரல் ஓங்கி ஒலிக்க, 'இலக்கியத்தில் இதைத்தான் எழுதலாம்- இதை எழுதக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. எழுதப்பட்ட விஷயம் இலக்கியமாகிறதா என்பது ஆராய்ச்சிக்குரியது' என்று ரகுநாதன் பதிலளித்திருக்கிறார்.
'பஞ்சமும் பசியும்' (1953) உழைப்பாளிகளின் பிரச்னைகளை பேசிய நாவல். அரசியல், சமூகம் சார்ந்த நாவல் வெளிவந்தபோது, அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
'இந்த நாவலை ஐரோப்பிய அறிஞர் கமில் ஸ்வலபில் 1957-இல் செக் மொழியில் மொழிபெயர்த்து, பிராக் நகரில் வெளியீட்டு விழா நடத்தி முதல் பதிப்பிலேயே 50 ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளார்' என்கிறார் பதிப்பாசிரியர். தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டுக்கான இந்த நூல், தீவிர வாசிப்பாளர்களுக்கு நல்விருந்து.