இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் - வீரபாண்டியன்; பக்.510; ரூ.510; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044-24330024.
சமூகக் கட்டமைப்பு, மீள் கட்டமைப்பு பற்றி பேசுவதோடு மட்டுமல்லாது தமிழகத்தின் நினைவுகளில் புறந்தள்ளப்பட்ட வரலாறையும் இந்த நூல் கவிஞர்கள், அவர்தம் கவிதைகள் வழி ஆய்வு செய்துள்ளது.
அரசியல், போராட்டம், வன்செயல்களை மையப்படுத்திய மூன்று பாகங்களும் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் சமூக வரலாற்றைப் பேசுகின்றன. பின்னி மில் போராட்டம், கோவை ஸ்டேன்ஸ் மில் போராட்டம், டிராம்வே குறித்த தொழிலாளர்களின் படைப்புகளையும் ஆய்வு செய்துள்ளது.
பாரதியார், கவிமணி, திருமூர்த்தி, நாமக்கல் கவிஞர் முதல் நவீனக் கவிஞர் வைரமுத்து வரையிலான 25 பேரின் கவிதைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது சிறப்பு.
இலக்கண வரம்புக்குள் இருக்கும் படைப்புகளை முதன்மைப்படுத்தாமல் பாடுபொருளை மையப்படுத்தியும், ஒரேயொரு வரியில் வரலாற்று நிகழ்வை மையப்படுத்திய கவிதைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.
மேடையில் பாடுவதற்காக தோழர் ஜீவா எழுதிய பாடல்களை பதிவு செய்திருப்பதன் மூலம் வரலாற்று நிகழ்வுகளின் தேர்விலிருந்துதான் இந்நூலுக்கு கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது புலனாகிறது.
பொதுவெளிக்கு வராத சில புதிய நிகழ்வுகளையும், காலப்போக்கில் கடந்துபோன பல முக்கிய நிகழ்வுகளையும் ஆய்வின் மூலம் இந்நூல் வெளிக்கொணருகிறது.
கவிதைகளை வாசித்து ரசிப்பதில் இருக்கும் மதிப்பீட்டைவிட, வரலாற்று நோக்கில் வாசிக்கும்போது அதன் மதிப்பீடு இன்னும் உயரும் என்பதை இந்நூல் வழியே நூலாசிரியர் நினைவூட்டுகிறார்.
வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களும், சமூக அக்கறைகளை உள்ளடக்கிய கவிதைகளை நேசிப்போரும் வாசிக்க வேண்டிய நூல் இது.