1908 முன்னும் பின்னும்
1908 முன்னும் பின்னும் - எஸ்.காசி விஸ்வநாதன்; பக். 180; ரூ.150; நக்கீரன், சென்னை-14; ✆ 044- 4399 3000.
ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டில் முதல் வெகுஜன எழுச்சியை ஆக்ரோஷமாக எழுப்பிய 'திருநெல்வேலி எழுச்சி' நிகழ்வுதான் நூலின் பிரதானம்.
1908-ஆம் ஆண்டு மார்ச் 8-இல் விபின் சந்திர பாலர் விடுதலையான நாளை சுயராஜிய நாளாகக் கொண்டாட திருநெல்வேலி மாவட்ட மக்கள் முடிவு செய்தது, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கைது, அதன் பின்விளைவுகள் ஆகியவை நாடெங்கும் பேசப்பட்டது. 'திருநெல்வேலி எழுச்சி' என வரலாற்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வு குறித்து பலரும் அறியாத அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸின் தோற்றம், போராட்டத் தன்மைகள், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் போராட்டங்கள், தியாகங்கள் போன்றவற்றை நூலாசிரியர் ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ள விதம் சிறப்பானது.
'திருவனந்தபுரம் எழுச்சி', 'திலகர் வழக்கு', 'அரவிந்தர் வழக்கு', 'ஆஷ் கொலை' போன்றவை குறித்த அரிய தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
'தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி' எனும் கட்டுரையில், 1857-இல் இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னரே 1806-இல் வேலூர் சிப்பாய்ப் புரட்சியும், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள் உள்பட பல சரித்திர நாயகர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து வீழ்ந்துபட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது. பாரதியின் குரு நிவேதிதா தேவி, புரட்சியாளர் சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், பாலகங்காதரதிலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் போன்றோரின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பு குறித்த அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. பொக்கிஷமான நூல் இது.