சமூகவியல் பார்வையில் தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்
சமூகவியல் பார்வையில் தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்- க.ப.அறவாணன்; பக்.208; ரூ.200; தமிழ்க் கோட்டம், சென்னை- 29; ✆ 95977 17485.
தமிழின் பெருமைகளை, தமிழர்களின் வீரத்தை விளக்கும் பல்வேறு நூல்களை எழுதிய நூலாசிரியரின் சிறப்புக்குரிய நூல்களில் இதுவும் ஒன்று. தொடக்கக் கட்டுரையான, 'மூக்கரி பழக்கம் '-இல் அன்றைய காலத்தில் மூக்கை அரிந்தது ஏன்? என்பதற்கு, தண்டனை, அவமானம், தோல்வி உள்பட பல்வேறு விதங்களில் காரணங்களுக்கான விளக்கம் தருகிறார் நூலாசிரியர்.
தமிழர்கள் நாடும் ஜோதிடக் கலை குறித்த கட்டுரை பல்வேறு காரணங்களுடன், நன்மைகளும் தீமைகளையும் ஆய்வு செய்கிறது. தலைவன்- தலைவி பிரிவை விளக்கும் பாலைபிரிவும், பழங்குடியினர்களின் வாழ்க்கை முறைகள், இலக்கியங்களும் மக்களும், ஆதித் தமிழர்களின் தேர்தல் முறை, சைவ சமயத்தின் சிறப்புகள், இலக்கியப் படைப்புகள், அன்றைய தமிழகத்தில் நிலம் தனி உடைமை போன்ற கட்டுரைகள் முழுக்க முழுக்க ஆய்வு நோக்கில், இலக்கிய சான்றுகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன.
தமிழுக்குப் பெருமை சேர்த்த இளங்கோ, செயங்கொண்டார், கவிமணி, உ.வே.சா., வையாபுரியார், பாவாணர் போன்ற அறிஞர்களை இலக்கிய வழியில் போற்றும் கட்டுரைகள் சிறப்பு.
நூலின் இறுதியில், நூலாசிரியர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் வகையில் பேசிய பேச்சுகளின் தொகுப்பு அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டும் செயல்தான். தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் இன்றைய தலைமுறையினர் எளிய வழியில் புரிந்துகொள்ள இந்த நூல் பேருதவியாக இருக்கும்.