செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்
செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்; தொகுப்பு: துரை.மதிவாணன்; பக்.304; ரூ.300; பூஞ்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை- 622 005; ✆ 98420 37480.
வ.உ.சி. காலத்தில் வாழ்ந்த பாரதியார், பரலி சு.நெல்லையப்பர், அரவிந்தர், வ.ரா., திரு.வி.க., எஸ்.வையாபுரிப்பிள்ளை, பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர், ம.பொ.சி., இக்கால ஆய்வாளர்களான ரெங்கையா முருகன், குருசாமி மயில்வாகனன், கதிர்நம்பி உள்ளிட்டோர் எழுதிய 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
கப்பலோட்டிய தமிழர் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் போற்றப்படும் வ.உ.சி.யின் போராட்டங்களும், தியாகமும் ஈடு இணையற்றவை. வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு குறித்து பல்வேறு நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவரின் சமகாலத்தவர் எழுதிய இக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இக்கால தலைமுறையினருக்கு உணர்த்துவதாக உள்ளன.
செல்வச் செழிப்புமிக்க வழக்குரைஞருக்கு மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே படித்து வழக்குரைஞர் தொழிலுக்கு வந்த வ.உ.சி., ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக, தமிழியச் செயற்பாட்டாளராக, தொழில்முனைவோராக, தொழிற்சங்கத்தவராக, சீர்திருத்தச் சிந்தனையாளராகப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.
அந்நியப் பொருள்களை விலக்காமல் சுதேசியம் பலிக்காது என்ற முடிவுக்கு வந்து ஒரு அந்நியப் பொருள்கூட தனது வீட்டில் இருக்கக் கூடாது என சத்தியப் பிரமாணம் எடுத்தவர்.
சவரத் தொழில் செய்பவரிடம் சுதேசிய கத்தி இல்லையெனில் முகச்சவரம் செய்யாமலேயே திரும்பிவிடுவார் போன்ற தகவல்கள் அவரது சுதேசிப் பற்றை வெளிப்படுத்துகின்றன. வ.உ.சி. முன்னெடுத்த தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம், விடுதலைக்கான போரில் தனது செல்வம் முழுவதையும் இழந்து, சிறையில் துன்புற்று, வறுமையில் வாடிய அவரின் வாழ்க்கை வரலாறு விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.