திருமூலரின் நாடி முறை
திருமூலரின் நாடி முறை - சி.எஸ். முருகேசன்; பக். 160; ரூ. 175; சங்கர் பதிப்பகம், சென்னை - 49; ✆ 98408 28213.
சைவக் கருவூலமான பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறை-திருமூலரின் 'திருமந்திரம்'. மூவாயிரம் பாடல்களைக் கொண்ட இந்நூல், பாயிரம் நீங்கலாக ஒன்பது தந்திரங்களைக் (உட்பிரிவுகளை) கொண்டது. அதில், இரண்டாம் தந்திரத்தில் இடம் பெற்றுள்ள 'கர்ப்பத் திருமந்திரம்', 'திருமந்திரம் வைத்தியப் பகுதி' ஆகிய இரு பகுதிகளில் இடம்பெற்றுள்ள பாடல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் தொகுத்து நூலாக்கியுள்ளார் ஆசிரியர். உடலில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்கள் தோன்றும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. நோய்களைக் கண்டறிவதற்கான சோதனை முறைகளில் ஒன்றான நாடி முறை குறித்து நூல் விரிவாகப் பேசுகிறது.
'கர்ப்பத் திருமந்திரம்' எனும் முதல் பகுதியில், கரு உற்பத்தி, உடல் - உயிர் இணையும் நிலை, மூச்சு இயங்கும் முறை போன்றவை விளக்கப்பட்டுள்ளன. 'திருமூலர் நாடிமுறை' எனும் இரண்டாம் பகுதியில் மூல நாடிகள், நாடி மாறுபாடுகள், ஐம்பூதக் கொள்கை, வாதம், பித்தம், கபம் முதலியன விளக்கப்பட்டுள்ளன. 'நோயும் வைத்தியமும்' எனும் மூன்றாம் பகுதியில் நாடி முறையில் விளக்கப்பட்டுள்ள நோய்கள், மருத்துவ முறைகள் குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பாடல், விளக்கத்தோடு நின்றுவிடாது, நாடி பார்க்கும் முறை, கருவில் குழந்தை உருவாகும் விதம் போன்ற பலவற்றையும் படம் வரைந்து விளக்கியிருப்பது மிகவும் பயன்தரக் கூடியது. மேலும், திருமந்திரம் மட்டுமல்லாது, அகத்தியர் ஞானம், தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள், சித்தர் நூல் திரட்டு, குணவாகட நாடி போன்ற பல்வேறு நூல்களிலிருந்தும் மேற்கோள்களைத் தந்திருப்பது சிறப்பு. சித்தர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும், சித்த வைத்தியம் பயிலும் மாணவர்களுக்கும் இந்நூல் ஓர் சிறந்த கையேடு.