பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்
பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம் - ரகுராம் ஜி. ராஜன், ரோகித் லாம்பா (தமிழில் - பிஎஸ்வி குமாரசாமி); பக். 376; ரூ. 599; பிரகாஷ் புக்ஸ், மேக் டவர்ஸ், 307/165, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை -95.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார வல்லுநர் ரோகித் லாம்பாவுடன் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய "பிரேக்கிங் த மோல்ட்' என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது.
இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் பற்றிய ஒரு புதிய பார்வையை முன்வைக்கும் இந்த நூலில், 'இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கிறது?' என்று தொடங்கி, 'மேல்தட்டு வர்க்கம் ஏறுமுகமாகவும் நடுத்தர வர்க்கம் இறங்குமுகமாகவும் செல்வதன் மூலம் அதிக சமத்துவமின்மையுள்ள ஒரு நாடாக இந்தியா மாறுகிறதா?' என எண்ணற்ற தொடர் கேள்விகளை எழுப்பி, விரிவான பதில்களை அலசுகிறார்கள் நூலாசிரியர்கள்.
நாடுகள் எவ்வாறு செழிப்புறுகின்றன என்பதுடன், வளரும் நாடுகளின் படுவேக வளர்ச்சிக்கு காரணங்களை விளக்கி, அரசு நிர்வாகத்துக்கும் செயல் வல்லமைக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நாட்டின் சாதக பாதகங்கள் விவாதிக்கப்படுகின்றன. மக்களின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் யோசனைகளைத் தெரிவிக்கும் நூலில், மிகச் சிறந்த தலைமை இருந்தால், தாங்கள் தெரிவிக்கும் பிரம்மாண்டமான சீர்திருத்தங்களையும் எளிதில் நிறைவேற்றிவிடலாம் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.
இந்தியா தனது பழைய வார்ப்புகளை உடைத்தெறிந்துவிட்டு, தனித்துவமான வழியில் அடியெடுத்து வைத்தால், இருபதாண்டுகளில் சிறப்பான எதிர்காலத்தை வசப்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர்.
சமகாலச் செயல்பாடுகளை விரிவும் ஆழமும் சேர அலசி ஆராய்கிற, இத்தகைய பொருளியல் நூல்கள், தமிழில் வெளிவர - மொழிபெயர்க்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது இந்த நூல்.