முகப்பு
நூல் அரங்கம்

வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி வாழ்க்கை வரலாறு

அவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றின் முழு தகவல்களும் 31 தலைப்புகளில் மூன்று பகுதிகளாக நூலாக வெளிவந்துள்ளது.

Updated On : 10 நவம்பர், 2025 at 10:08 AM
பகிர்:

வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி வாழ்க்கை வரலாறு- செ.அருள்செல்வன்; பக்.572; ரூ.660; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 078, ✆ 87545 07070.

பெரியார் ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி திமுகவின் தொடக்கக் காலத் தலைவர்களில் ஒருவர்.

அவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றின் முழு தகவல்களும் 31 தலைப்புகளில் மூன்று பகுதிகளாக நூலாக வெளிவந்துள்ளது.

திமுகவின் தொடக்கக் கால வரலாற்றை இந்த நூலின் வாயிலாக அறிய முடிகிறது. 1960-இல் சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கும் வகையில் சட்டப்பேரவையில் அவர் கொண்டுவந்த தனிநபர் மசோதா குறித்த விவாதம் உள்பட பல்வேறு சட்டப்பேரவை விவாதங்கள் நூலில் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் அவையில் எதிரும் புதிருமான கட்சிகளின் ஆரோக்கியமான விவாதம் சிந்திக்க வைக்கிறது.

சட்டப்பேரவையில் இவரது உரைகளில் நாட்டில் உள்ள பிரச்னைகளையே விவாதித்துள்ளார். ஹிந்தி திணிப்பு, ஜாதிய அடக்குமுறைகள் குறித்து அப்போதே மக்களவையில் முழங்கியிருக்கிறார்.

அவர் எழுதிய முக்கிய தலையங்கங்களைப் படிக்கும்போது, அவர் எந்தளவுக்கு சிறந்த சிந்தனையாளராகவும், மக்கள் மீது பற்றுடையவராகவும் இருந்துள்ளார் என்பதோடு, அவை எந்தளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

'திமுகவின் முன்னணித் தலைவராக இருந்தாலும், மக்கள் சபைகளின் உறுப்பினராகவே இருந்துள்ளார் என்றும் அமைச்சராகவோ, வேறு எந்த முக்கிய பதவியும் வழங்கப்படாமல் இருந்தது ஏன்?' என்ற வினாவையும் நூலாசிரியர் எழுப்பியுள்ளார். புத்தகம் எழுதியதற்காக திருச்சி சிறையில் அவர் அனுபவித்த கொடுமை, மிசா காலக் கொடுமை போன்ற பல்வேறு அரசியல் வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தனிநபர் வரலாறாக இல்லாமல், திராவிட இயக்கத்தின் வரலாறாகவே இருக்கும் இந்த நூலை அரசியல் அறிந்துகொள்வோர் வாசிக்க வேண்டியது அவசியமானதும்கூட!

முழு கட்டுரையைப் படிக்க →