நாளை என்ன வேலை? கல்லூரி படிப்பு பற்றிய வழிகாட்டி
மொத்தம் 18 தலைப்புகளில் ஒரு கையடக்கக் கையேடாக உருவாகி உள்ளது இந்நூல்.
நாளை என்ன வேலை? கல்லூரி படிப்பு பற்றிய வழிகாட்டி-ரமேஷ் பிரபா; பக்.136; ரூ.140; விகடன் பிரசுரம், சென்னை- 600 002, ✆ 80560 46940.
கல்விதான் ஒருவரின் உயர்வுக்கு அடிப்படை ஆதாரம். அதை கசடற கற்று அதற்குரிய அங்கீகாரத்தை உயர் பதவிகள் மூலமாகப் பெற்று, தனக்கும், தான் சார்ந்த குடும்பத்துக்கும், இந்த சமூகத்துக்கும் தன்னை ஒரு வெற்றியாளனாக்க இருக்கும் வாய்ப்புகளை வகைப்படுத்திக் காட்டுகிறது இந்த நூல்.
மருத்துவம், பொறியியல் படிப்புகள் மட்டுமே உயர்ந்த தகுதியைப் பெற்றிருந்த காலம் மாறி இன்று, அதற்கு இணையான உயர்வை தரக்கூடிய பல படிப்புகள் உள்ளன. அதன் வகைகளையும் வாய்ப்புகளையும் தெளிவுற காட்டுகிறார்
நூலாசிரியர்.
தமிழகத்திலும் தேசிய அளவிலும் இன்றைய கல்விச் சூழல் எப்படி இருக்கிறது? மாறிவரும் தொழில்நுட்பம், அதற்கான படிப்புகளை எந்த வகுப்பில் தொடங்க வேண்டும் என்ற தகவல்களுடன், விவசாயிகளையும் மாணவர்களையும் ஒப்பிட்டு, மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கூறியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதும், மாணவர்களிடையே போட்டிகள் அதிகரித்திருக்க காரணம். நுழைவுத் தேர்வுகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், ஊடகத் துறை, சட்டம், வேளாண், இசை, நடனம் என எல்லாத் துறைகளிலும் உள்ள படிப்புகள் குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.
உடனடி வேலைவாய்ப்புகள் தரும் படிப்புகள் என்கிற பகுதி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். நீட் தேவைப்படாத மருத்துவப் படிப்புகள் குறித்த தகவல்களும், கவுன்சலிங் வழிகாட்டல்கள் என மொத்தம் 18 தலைப்புகளில் ஒரு கையடக்கக் கையேடாக உருவாகி உள்ளது இந்நூல்.