ஓர் எல்லையற்ற நொடிப்பொழுது
ஒடியா மொழியில் வெளியான இந்த நூல் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளது.
ஓர் எல்லையற்ற நொடிப்பொழுது-பராமிதா சத்பாதி; ஆங்கிலத்தில்-சிநேகபிரவ தாசு; தமிழில்-புதுவை யுகபாரதி; பக்.400; ரூ.400; சாகித்திய அகாதெமி வெளியீடு, சென்னை-600 018. 044-2431 1741.
ஒடியா மொழியில் வெளியான இந்த நூல் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளது.
எளிமையாக இல்லாமல் வலிமையாக இருந்ததாக மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டுள்ளார் மொழிபெயர்ப்பாளர். அனைத்து சிறுகதைகளும் அவற்றுக்குரிய அளவில் இல்லாமல், சற்றே கூடுதலான அளவில் குறுநாவலைத் தொடும் அளவில் உள்ளன.
முற்றிலும் மாறுபட்ட கலாசார வழக்கங்கள், சடங்குகள், உரையாடல்கள், உறவுகள் என எல்லாக் கதைகளும் நம்மை வேறு ஒரு பரப்புக்குக் கொண்டு செல்கின்றன. மொழிபெயர்ப்புத் திறன் காரணமாக ஒவ்வொரு கதைகளும் அதன் மையக் கரு சிதையாமல் தனது இலக்கை எட்டி இருக்கின்றன.
மனிதர்கள் அன்றாடம் கடைப்பிடிக்கும் தர்ம நெறிகளின் வரம்புக்குள் நடக்கும் நிகழ்வுகள், பெண்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் தடைகள், வெற்றிகள், தோல்விகள் என அவர்களின் உலகத்தில் இருந்து, அவர்களின் பார்வையில் சொல்லப்படும் கருத்துகளால் அவர்களின் உலகம் வெளியாகியிருக்கிறது.
மனிதர்களின் எண்ணங்களில் தோன்றும் வெவ்வேறு விதமான அபிலாஷைகள், கோபங்கள், காரணம் தெரியாமல் கடைப்பிடிக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் அதிலிருந்து விடுபடத் துடிக்கும் சில மனிதர்கள் என்று மிக நுட்பமான பாத்திரங்களைக் காட்டியிருக்கிறார்கள் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளர்களும்.
இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால் மொழிபெயர்ப்பின் வலிமை என்பது, வேறு ஒரு தனித்த பரப்பில் இருக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் உணர்வுகளையும் அதன் கருப்பொருள் கலையாமல் அப்படியே வாசகனின் உலகத்துக்குள் கரைத்துவிடும் அளவுக்கு இருக்கிறது.