பழந்தமிழர் மரபும் கலையும்
கோயில்களின் தரை அமைப்பில் தொடங்கி, தூண்கள், கோயில் விமானம், கருவறை, மண்டபங்கள், இறை உருவங்கள், நந்தி, கொடிமரம் என ஆய்வுத் தகவல்கள் வியக்க வைக்கின்றன.
பழந்தமிழர் மரபும் கலையும்- முனைவர் ஜே.ஆர்.இலட்சுமி; பக்.325; ரூ.350; காவ்யா, சென்னை-600 005. ✆ 044- 23726882.
தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, நாட்டுப்புறக் கலை போன்றவை பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர நாயக்கர், செஞ்சி நாயக்கர் காலங்களில் வளர்ந்த வரலாற்றை கள ஆய்வு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
சிற்பங்களில் ஆடல் மகளிரின் அபிநயங்கள், சிற்பங்களில் நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள், நுணுக்கங்கள் போன்றவை உரிய படங்களோடு விளக்கிக் கூறப்பட்டுள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவில் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன அம்சமாக கோயில் கட்டுமான அமைப்பு தோற்றம் பெற்றது என்பது அதில் குறிப்பிடத்தக்க ஒன்று. குடைவரைக் கலையில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தியவர் பல்லவப் பேரரசனான மகேந்திரவர்மன் என்பதை சான்றுகளுடன் நிரூபிக்கிறார்.
கோயில்களின் தரை அமைப்பில் தொடங்கி, தூண்கள், கோயில் விமானம், கருவறை, மண்டபங்கள், இறை உருவங்கள், நந்தி, கொடிமரம் என ஆய்வுத் தகவல்கள் வியக்க வைக்கின்றன.
இறைவழிபாடுகள், சைவ- வைணவ வழிபாட்டு முறைகள், பெண் தெய்வங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், பிரதிமை உருவங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
(மன்னர் கால) அரசியல், ஆன்மிகம், இலக்கியம், தமிழர் பண்பாடு, வரலாறு, கலை என்று துறைகளை ஒருங்கிணைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் அறிய வேண்டிய விஷயங்களை ஒற்றை நூலில் அறியும் வகையில் பழந்தமிழர் மரபு, கலைகளின் தகவல் களஞ்சியமாக இந்த நூல் திகழ்கிறது.