கற்பின் கொழுந்து கண்ணகி தெய்வம்!
சிற்பங்களின் புகைப்படங்கள், கோட்டோவியங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது நூலுக்கு அழகு சேர்க்கிறது.
கற்பின் கொழுந்து கண்ணகி தெய்வம்!- மு. பாலகிருஷ்ணன்; பக். 128; ரூ. 199; வானவில் புத்தகாலயம், சென்னை- 600 017, ✆ 72000 50073.
இரட்டைக் காப்பியங்களில் இணையிலாப் புகழ்கொண்ட முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதன் நாயகி காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து, கோவலனை மணம் புரிந்து, மதுரையை எரியூட்டி, நீதியின் அடையாளமாகத் திகழும் கண்ணகி.
சேர நாட்டில் 'மங்கல தேவி'யாகவும், இலங்கையில் 'கண்ணகி அம்மன்'ஆகவும், கேரளத்தில் 'பகவதி' ஆகவும் வழிபடப்படும் கண்ணகியின் வாழ்க்கை அனைவரும் அறிந்த ஒன்றுதான். என்றாலும், எளிய முறையில் ஒரு பெருங்காப்பியத்தின் முழுமையான சாரம் குறையாமல் முற்றிலும் வேறொரு கோணத்தில் பல்வேறு புதிய தகவல்களின் களஞ்சியமாக உள்ளது இந்த நூல்.
Advertisement
'இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்', 'கோவலன்-கண்ணகி திருமணம்', 'மாதவிப் பொன்மயிலாள்', 'சேரன் செங்குட்டுவன் கண்ணகி கோட்டம் அமைத்தல்', 'பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புகள்' உள்ளிட்ட பன்னிரண்டு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. 'சிலப்பதிகாரம் கற்பனைக் கதையா' என்ற தலைப்பிலான ஆய்வு நோக்கில் அமைந்துள்ள சொல்லோவியம், தொடர் ஆய்வு மேற்கொள்வோருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது.
சிலப்பதிகார வரிகள் மட்டுமன்றி பாரதிதாசனின் 'கண்ணகி புரட்சிக் காப்பியம்' நூலிலிருந்தும், பேராசிரியர் கோவிந்தனார் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள், சான்றோர்களின் கருத்து
களையும் கோத்து அழகான மாசறு பொன் மாலையாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர்.
சிற்பங்களின் புகைப்படங்கள், கோட்டோவியங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது நூலுக்கு அழகு சேர்க்கிறது.