ஜனநாயகன் கற்பூரி தாக்கூர்
சோஷலிசம் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சிந்திப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது இந்த நூல்.
ஜனநாயகன் கற்பூரி தாக்கூர்-சந்தோஷ் சிங், ஆதித்யா அன்மோல், தமிழில்: ஜனனி ரமேஷ்; பக். 440; ரூ. 500; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600 004, ✆ 044-4200 9603.
ரத்தமும் சதையுமாக வாழ்ந்து மறைந்த உண்மையான ஜனநாயகனான சோஷலிஸ்ட் தலைவர் கற்பூரி தாக்கூரின் வாழ்க்கை வரலாறு இங்கே மிகச் சிறந்த முறையில் நூலாக்கம் பெற்றிருக்கிறது.
ராம் மனோகர் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயணுக்குப் பிறகு இந்தியாவின் சோஷலிசத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் கற்பூரி, நாட்டில் முதல்வர் பதவியேற்ற முதல் சோஷலிஸ்ட் எனலாம்.
Advertisement
பிதெüஞ்சியா என்ற குக்கிராமத்தில் ஒரு நாவிதரின் மகனாகப் பிறந்த தாக்கூர், அரசியல் தலைவராக உயர்ந்து எவ்வாறு சமூக மாற்றத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார் என்பதற்கான சம்பவங்கள் நூலில் விவரிக்கப்படுகின்றன.
பிகாரில் 1967-இல் காங்கிரஸ் வீழ்ந்து, முதன்முதலாக பதவியேற்ற காங்கிரஸ் அல்லாத அரசில் வாய்ப்பிருந்தும் முதல்வராக முடியாமல் கற்பூரி துணை முதல்வரானதன் பின்னணியிலுள்ள ஜாதி அரசியல் குறித்து விளக்குவதுடன், இந்த விஷயத்தில் ராம் மனோகர் லோஹியாவின் சிறப்பான அணுகுமுறையும் எடுத்துக்காட்டப்படுகின்றன.
1970 டிசம்பரில் பிகார் முதல்வரானபோதுதான், நிலுவையிலிருந்த நில வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகமானது. மிகக் குறுகிய காலமே (163 நாள்கள்) பிகாரின் முதல்வராக கற்பூரி பதவி வகித்தபோதிலும் அவர் அறிமுகப்படுத்திய இட ஒதுக்கீட்டு முறைகள் தனிச்சிறப்புள்ளவை.
1988-இல் எதிர்பாராமல் நேரிடுகிறது கற்பூரியின் மரணம். இன்னமும் விளக்கப்படாமல் இருக்கிறது அதன் பின்னணியிலுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் மர்மம்.
இன்றைய அரசியல் சூழலில் கற்பூரியுடைய அரசியல் பாரம்பரியமும் தேவையும் செயற்பாட்டு முறைகளும் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன; தேவைப்படுகின்றன என்பதை இந்நூல் மிகச் சிறப்பாக விளக்குகிறது; சோஷலிசம் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சிந்திப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது இந்த நூல்.