டாக்டர் ரங்காசாரி - வாழ்க்கை வரலாற்றுப் புதினம்
52 ஆண்டுகளே வாழ்ந்த அந்த மாமேதையின் வாழ்க்கையை நாவல் பாணியில் படித்து ரசிக்கலாம்.
டாக்டர் ரங்காசாரி - வாழ்க்கை வரலாற்றுப் புதினம் - ராஜம் கிருஷ்ணன்; பக். 376; ரூ. 400; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 600 017, ✆ 044-24331510.
கடந்த 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகப் பிரபலமாக விளங்கிய மருத்துவரான எஸ்.ரங்காசாரி குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் இது. சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளை வென்ற பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நாவல் வடிவில் இதனை எழுதி வெளியிட்டார். அதன் மறுபதிப்பாக தற்போது வெளிவந்துள்ளது.
அறுவை சிகிச்சை முறையில் அசாதாரணமான, அதிசயக்கத்தக்க திறனைப் பெற்றிருந்த டாக்டர் ரங்காசாரியின் வாழ்க்கையையும் மருத்துவ சேவையையும் குறித்து கனிவுடனும் நுட்பமாகவும் இவ் வாழ்க்கை வரலாற்று நூல் சித்தரிக்கிறது.
பிறவியிலேயே அவர் பெற்றிருந்த புத்திக் கூர்மையும் தனது தீவிர முயற்சியால் வளர்த்துக் கொண்ட மருத்துவத் திறன்களும் அவரை நாடே போற்றும் மருத்துவராக்கியது. பிரசவ வைத்தியத்தில் புகழ் பெற்று விளங்கினார்.
அவர் செல்வந்தர்களிடம் சிகிச்சைக்காகப் பெரும் கட்டணத்தைப் பெற்றாலும், வறியவர்களிடமிருந்து எதையும் கேட்கவோ - பெறாமலோ மருத்துவம் பார்த்தார்.
வசதியான குடும்பத்தில் பிறந்த அவர், தனது மருத்துவத் தொழில் திறனால் பெரும் செல்வம் ஈட்டினார். புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி, அதிலேயே நாள் முழுவதும், சென்னை மாநகரம் முழுவதும் வலம் வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
பின்னர், சொந்தமாக ஒரு சிறிய ரக விமானத்தை வாங்கி ஊர் ஊராகப் பறந்து சென்று மருத்துவம் பார்த்த அவருக்கு 'பறக்கும் மருத்துவர்' என்ற பெயர் கிடைத்தது. அவரது அரிய குணங்களை விளக்கிக் காட்டும் ஏராளமான சொற்சித்திரங்கள் இந்நூல் முழுவதும் காணக் கிடைக்கின்றன.
52 ஆண்டுகளே வாழ்ந்த அந்த மாமேதையின் வாழ்க்கையை நாவல் பாணியில் படித்து ரசிக்கலாம்.