புத்தரின் தம்மபதம் ஞான விளக்கம்
முதல் இயலான இரட்டை, மனித எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றின் இரட்டைத் தன்மையை விளக்குகிறது.
புத்தரின் தம்மபதம் ஞான விளக்கம் - ப. சரவணன்; பக். 448; ரூ. 520; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127; ✆ 81480 66645.
புத்தரின் தம்ம பதத்துக்கு உலகில் இதுவரை எண்ணற்ற மொழிகளில், எண்ணற்ற ஆய்வுரைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு வாசிப்பின்போதும் புதிய அனுபவங்களை, உணர்தலைத் தருபவை தம்மத்தின் வரிகள்.
புத்தரின் போதனைகள்தான் தம்மம். பல நூற்றாண்டுகளாக வாய்மொழியாக இருந்துவந்த தம்ம பதம், பின்னாளில் பாலி மொழியில் திரிபிடகமாக எழுத்து வடிவம் பெற்றது. மொத்தம் 26 அத்தியாயங்களையும் 423 வசனங்களையும் கொண்டது புத்தரின் வசனங்களின் தொகுப்பான தம்மத்தின் பாதை அல்லது சத்தியத்தின் பாதை எனப்படும் தம்ம பதம். தமிழில் அம்பேத்கர், ஆச்சார்ய ரஜ்னீஷ், பெரியார்தாசன் எனப் பலரின் தம்ம உரைகள் வெளிவந்திருக்கின்றன.
இந்த விளக்க நூலில் தம்மத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் விரிவான அறிமுகத்தையும் விளக்கத்தையும் ஆசிரியர் சரவணன் தருகிறார். தொடர்ந்து, புத்தரின் வசனங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு எளிய தமிழில் விளக்குகிறார்.
முதல் இயலான இரட்டை, மனித எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றின் இரட்டைத் தன்மையை விளக்குகிறது. மனம் என்ற இயல் ஆழ்ந்து வாசித்துணர வேண்டியது. 'மனம்தான் எல்லாம். நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்' என்கிறது தம்மம்.
ஞானத்தை எட்டிய ஒருவரின் குணங்களை விவரிக்கும் முழுமை, பெüத்தத்தில் முழுமையடைந்தவர் யார் என்பதற்கான அடையாளங்களைச் சுட்டுகிறது. ஆயிரம் பற்றிய இயலில், ஆயிரம் பயனற்ற வார்த்தைகளைவிட, பேச்சுகளைவிட ஒரு பயனுள்ள வார்த்தை சிறந்தது என்கிறார் புத்தர்.
செயல், சொல், எண்ணம் ஆகிய மூன்றிலும் தீமை செய்யாதவனை நான் புனிதன் என்கிறேன் (தம்மம் 26.9). இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் எத்தனை செயற்கை நுண்ணறிவுகள் தோன்றினாலும் மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஒழுக்கமாகவும் வாழ விரும்புவோருக்கான வழி புத்தரின் போதனைகள்.