வல்லவர்கள் நல்லவர்கள் ஆத்திகவாதியும், நாத்திகவாதியும்
மாஞ்சேரி நாராயண நம்பியார் என்கிற எம்.என். நம்பியாரின் பயணமும் என இரு பெரும் நடிப்புலக ஆளுமைகள் குறித்த சுவாரஸ்ய தொகுப்பு இந்நூல்.
வல்லவர்கள் நல்லவர்கள் ஆத்திகவாதியும், நாத்திகவாதியும்-பாஸ்கர்ராஜ், பக். 208; ரூ. 260; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 094, ✆ 90805 29054.
'மெட்ராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன்' என்கிற நபர் 'காந்தா' என்று கரகரத்த குரலை முதல்முதலில் திருச்சியில் ஒரு மேடையில் ஒலிக்கவிட்டு, மரபுசார் நடிப்பை தகர்த்து நவீன நடிப்பை வெளிக்காட்டி எம்.ஆர். ராதா என்று புகழ்பெற்ற பயணமும், 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில், கண்களை உருட்டி, புருவத்தை உயர்த்தி ரசிகர்கள் அச்சப்படும் வகையில் திரையரங்கம் அதிர 'ராமு' என அதட்டும் குரலில் நடித்த மாஞ்சேரி நாராயண நம்பியார் என்கிற எம்.என். நம்பியாரின் பயணமும் என இரு பெரும் நடிப்புலக ஆளுமைகள் குறித்த சுவாரஸ்ய தொகுப்பு இந்நூல்.
தாயிடம் கோபப்பட்டு வீட்டை வெளியேறி சுமை தூக்கும் தொழிலாளியானார். டப்பி ரங்கசாமி நாயுடுவின் கவனத்தை ஈர்க்கவே நாடக நடிகர் ஆனார் எம். ஆர். ராதா.
பொருளாதாரச் சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி 13-ஆவது வயதில் கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை வந்து நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து, முதலில் சமையலறை உதவியாளராக இருந்து நடிக்க வந்தவர் எம்.என்.நம்பியார்.
பகுத்தறிவுப் பாதையைத் தேர்தெடுத்தது, சந்தித்த சவால்கள், பிரபலங்கள் அவரைப் பற்றிக் கூறும் தகவல்கள், எல்லோரையும் சமமாக மதித்த பாங்கு, சுயமரியாதைக்கு தந்த முக்கியத்துவம் என நூலின் கூடுதல் பக்கங்கள் எம்.ஆர்.ராதாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
முதல்முதலில் 11 வேஷங்களில் நடித்த சாதனை, பேட்டி, எம்.ஜி.ஆருடன் இருந்த நட்பு, ஆங்கிலப் படத்தில் நடித்தது என நீண்டு, ஆன்மிகப் பாதையில் பயணித்த எம்.என்.நம்பியார் என அவரது தகவல்களின் பக்கங்கள் சற்று குறைவாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை.